உலகம் ஒரே ஒரு குட்டி வைரஸால் ஒன்று பட்டுக் கொண்டு இருக்கிறது எனச் சொன்னால் அது மிகை இல்லை. அந்த அளவுக்கு கொரோனா வைரஸுக்கு தீர்வு கண்டு பிடிக்க அனைத்து, உலக நாடுகளூம் போராடிக் கொண்டு இருக்கின்றன.
இப்போது வரை, கொரோனா வைரஸால் உலகில் மொத்தம் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 11,400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் சுமார் 234 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
அமெரிக்கா
அவ்வளவு ஏன்..? கொரோனா வைரஸால், உலகின் சக்தி வாய்ந்த நாடாக வலம் வந்து கொண்டிருக்கும் அமெரிக்காவையே கொரோனா புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை சுமார் 19,650 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. அதில் 264 பேர் இறந்தேவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பொருளாதாரம்
கொரோனா வைரஸ் தொற்று நோயால், மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூட முடியாமல் தனிமையிலேயே இருக்கச் சொல்லி பல நாட்டு அரசாங்கங்களும் வலியுறுத்துகிறார்கள். இதனால் சாதாரண உற்பத்தி ஆலை தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை மக்கள் அலுவலகங்களுக்குச் சென்று வேலை பார்க்க முடியவில்லை. இதனால் நேரடியாக பல நாடுகளில் ஏற்றுமதி, இறக்குமதி தொடங்கி அன்றாட உள் நாட்டு வியாபாரம், முதலீடுகள் வரை எல்லாமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்திய பொருளாதாரம்
இந்த கொரோனா வைரஸால் இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இண்டிகோ போன்ற பெரிய நிறுவனங்களில் சம்பள குறைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். பல நிறுவனங்களில் ஆட்களைக் குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கான ஒப்பந்தங்கள் நீட்டிக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் கையில் பணம் புரள்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில் பொருளாதாரம் எப்படி வளரும்..?
ஜிடிபி வளர்ச்சி
ஏற்கனவே, இந்தியாவின் ஜிடிபி கடந்த நான்கு காலாண்டுகளாக 5.8 சதவிகிதத்தில் இருந்து சரிந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், அடுத்த 2020 - 21 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வரை சரியலாம் என அனலிஸ்ட்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இப்போது அந்த கணிப்புகளை ஃபிட்ச் நிறுவனமும் தன் கணிப்புகள் வழியே உறுதி செய்து இருக்கிறது.
ஃபிட்ச்
உலகின் முன்னணி ரேட்டிங் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங்ஸ், இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.0 சதவிகிதமும், 2020 - 21 நிதி ஆண்டில் 5.1 சதவிகிதமும், 2021 - 22 நிதி ஆண்டில் 6.4 சதவிகிதமும் வளரலாம் என, உலக பொருளாதார அவுட் லுக் 2020 என்கிற அறிக்கையில் கணித்து இருக்கிறது.
முந்தைய கணிப்பு
இதற்கு முன், கடந்த டிசபர் 2019 கால கட்டத்தில், 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.6 சதவிகிதமும், 2021 - 22 நிதி ஆண்டில், இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவிகிதமும் வளரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள்
இந்த கொடூரமான கொரோனா வைரஸ் தொற்று நோயால், இந்தியாவின் வியாபார முதலீடுகள் தொடங்கி ஏற்றுமதிகள் வரை எல்லாமே பாதிக்கப்படலாம். அதோடு இந்திய உற்பத்தியாளர்களுக்கு சீன உடன் இருக்கும் வர்த்தகத் தொடர்பையும் இந்த இடத்தில் அடிக் கோடு போட்டுக் காட்டுகிறது ஃபிட்ச் நிறுவனம். இந்த காரணங்களோடு யெஸ் பேங்க் வேறு சேர்ந்து கொண்டதாகச் சொல்கிறது. எனவே இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.