உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு, இதுவரை பல ஆயிரம் மக்கள் உலகம் முழுக்க பலியாகியுள்ளனர்.
எனினும் தற்போது வரை அதன் கோரப்பசி அடங்கியதாக தெரியவில்லை. சொல்லப்போனால் நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே தான் செல்கிறது.
தினசரி காலையில் எழுந்தால், இந்தியாவில் எத்தனை பேர், இத்தாலியில் எத்தனை பேர், அமெரிக்காவில் என்ன நடந்துள்ளது. இப்படி தான் செய்திகள் வெளியாகி வருகின்றன.
பொருளாதாரத்தினை கொள்ளை அடிக்கும் கொரோனா
இது தான் இப்படி எனில் மறுபுறம், கொரோனாவின் கோரப்பசிக்கு மக்கள் மட்டும் பத்தாது. உலகம் பொருளாதாரமும் வேண்டும் என மொத்தத்தினையும் வாரி சுருட்டி கொண்டு சென்று கொண்டு இருக்கிறது இந்த கொடிய கொரோனா. அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் என்னவாகுமோ என்று நினைக்கவே பயமாகத்தான் இருக்கிறது.
மோசமாக வீழ்ச்சி காணும்
எனினும் பல மதிப்பீட்டு நிறுவனங்கள் தங்களது வேலையினை செப்பனே செய்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், 2021ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான அளவுக்கு வீழ்ச்சி கண்டு 2% ஆக குறைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
முந்தைய கணிப்பு
இந்த நிறுவனம் முன்னதாக 2021ம் நிதியாண்டிற்காக பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை 5.1% ஆக இருக்கும் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மந்தமான நிலையில் பொருளாதாரம் இருந்ததாகவும், ஆசிய நாணயங்களிலேயே இந்திய ரூபாய் தான் மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதைவிட மோசமாக வீழ்ச்சியடையும் என்பது மிக கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.
என்ன காரணம்
கொரோனா காரணமாக நாடு முழுவதும் தற்போது 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி, வினியோக சங்கிலி பாதிப்பு, ஏற்றுமதி என அனைத்தும் பாதிக்கப்படக்கூடும். மேலும் நுகர்வு குறையக் கூடும், இதனால் தேவை குறையும். பணப்புழக்கமும் குறையக்கூடும். மேலும் இதன் ஒட்டுமொத்த பார்வையும் பொருளாதாரத்தின் மீது தான் விழும் என்றும் கூறப்படுகிறது.
உலகளாவிய மந்த நிலை
இந்த மதிப்பீட்டு நிறுவனம் இந்தியா மட்டும் அல்ல, உலகளவில் ரெசசன் வரலாம் என்றும் கூறுகிறது. இதனையடுத்தே இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2% ஆக குறைத்துள்ளது. இது கடந்த மார்ச் 20 அன்று 5.1% ஆக மாற்றியமைத்தது. இதுவே கடந்த டிசம்பர் மாதத்தில் 5.6% ஆகக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் தற்போது நிலவி வரும் நிலையில், இந்த மதிப்பிலிருந்து இன்னும் குறைக்காமல் இருந்தால் சரியே என்று என்ன தோன்றுகிறது.
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கும்
நுகர்வு குறைவால் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு NBFCs வணிக கடன் வாங்குபவர்கள், குறிப்பாக குறைந்த அளவிலான கடன் வாங்கும் சிறு வணிகர்கள் ஆவர். அவர்களின் மூலதன பொருள் குறைவால், அல்லது ஏதேனும் ஒரு காரணத்தால் ஒட்டுமொத்த வணிகமும் பாதிக்கக்கூடும். இதனால் அவர்களின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனும் பாதிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படியாக ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி காணும், என்கிறது பிட்ச் ரேட்டிங்ஸ்.