டெல்லி: 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 12.8 சதவீதமாக வளர்ச்சி காணலாம் என பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.
முன்னதாக இந்த நிறுவனம் 11% வளர்ச்சி காணும் என்று கணித்திருந்தது. இந்த கணிப்பானது இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகிறது.
இதே 2023ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.8% ஆக வளர்ச்சி காணும் என்றும் கணித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இது இந்தியா மட்டும் அல்ல, அந்த சமயத்தில் உலக நாடுகள் பலவும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தன. இதனால் இந்தியாவில் தொழில்துறைகள் பலவும் முடங்கின.
இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி விகிதமானது, 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு 23.9% அளவுக்கு சரிவினை எட்டியது. இதே இரண்டாவது காலாண்டில் 7.5% சரிவினையும், இதே மூன்று ஆவது காலாண்டில் 0.45 வளர்ச்சியினையும் பதிவு செய்தது.
ஆக நடப்பு நிதியாண்டில் மிக மோசமான நிலையில் தொடங்கி, ஓரளவுக்கு வளர்ச்சி பாதையினை எட்டியுள்ளது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் சரிவினைக் சந்திக்கலாம் என ஆய்வு நிறுவனங்கள் கணித்து வருகின்றன.
இருப்பினும் 2021,ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 6.1% வளர்ச்சி காணலாம் என பிட்ச் கணித்துள்ளது. இதனை கடந்த டிசம்பரில் 5.3% ஆக கணித்திருந்தது. இது நிதி சப்போர்ட், சமூக இடைவெளி, கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
கடந்த காலாண்டுகளில் கொரோனாவினால் பொருளாதாரம் மட்டும் சீர்குலையவில்லை. அதோடு பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதோடு அமைப்புசாரா தொழில்துறையில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இது மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. ஆக மீண்டு வர சிறிது காலம் ஆகும் என நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.