பலவீனமான உள்நாட்டு தேவை மற்றும் விநியோக சங்கிலிகளின் சீர்குலைப்புகள் குறித்த கவலையால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை ஃபிட்ச் மதிப்பீடுகள் மாற்றியமைத்துள்ளன.
பிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9% ஆக கணிக்கப்பட்டுள்ளது.
இதே அடுத்த நிதியாண்டிற்கான (2020- 21) வளர்ச்சி விகிதம் 5.4% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி இவ்வளவு தான்
இது குறித்து பிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 - 20 ஆம் நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதத்தினை 4.9% ஆகவும், இதே 2020 - 21 நிதியாண்டிற்கான வளர்ச்சியினை 5.9% ஆகவும் மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டிலேயே ஜிடிபி விகிதம் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.7% ஆக குறைந்துள்ளது.
என்ன காரணம்
இதற்கு காரணம் கடந்த 2020- 21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தொழில்துறைக்கு ஏதுவான ஆதரவை வழங்குவதில் ஏற்பட்ட தோல்வி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஏற்கனவே கடன் அழுத்தத்தில் சரிந்துள்ள நிலையில், தற்போதும் மேலும் அழுத்தம் கண்டுள்ளது. இவ்வாறாக பல காரணங்களினால் இந்த விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிட்ச் மதிப்பீடுகள் கூறுகின்றன.
ஏன் இந்த திருத்தம்
நுகர்வோருக்கு வாகனம் மற்றும் வீட்டு கடன் வழங்குவதில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் தற்போது கொரோனாவினால் ஏற்றுமதி துறையில் பாதிப்பு, சீனாவின் இறக்குமதி பிரச்சனையால் ஆட்டோமொபைல் துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, விநியோக சங்கிலியில் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவை காரணமாக, இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிட்ச் சொல்யூசன்ஸ் தெரிவித்துள்ளது.
வளர்ச்சியில் அழுத்தம் அதிகரிக்கும்
மேலும் அடுத்த நிதியாண்டின் ஜூன் மாதத்தில் வளர்ச்சி கொஞ்சம் அதிகரிக்கலாம் என்றும் பிட்ச் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் தொடங்கிய கோவிட் -19 காரணமாக பலவீனமான தேவையால் உற்பத்தி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலவி வரும் சூழ்நிலையின் மத்தியில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனத்துறை வளர்ச்சியில் பலவீனம்
அடுத்த 2020 - 21ம் நிதியாண்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் முன்னேற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவசாயத்துறையும் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் வாகன துறை விற்பனையில் தொடர் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், வாகனத் துறையின் கண்ணோட்டம் பலவீனமாக இருப்பதாகவே பிட்ச் சொல்யூசன்ஸ் கூறியுள்ளது. மேலும் வரவிருக்கும் மாதங்களில் வாகன தேவை பலவீனமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது தவிர வாகன உற்பத்தியும் குறைந்து காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வாகன உற்பத்தி பாதிக்கலாம்
வாகனத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% பங்களிப்பை அளிக்கும் நிலையில், உற்பத்தியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியைக் கொண்டுள்ளது. அதிலும் சீனாவில் உற்பத்தி வீழ்ச்சி காரணமாக சரியான மூலதன கூறுகள் கிடைக்காமையால் வாகன உற்பத்தி பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி
குறிப்பாக சொல்லவேண்டுமானால் இந்தியாவில் வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 10 - 30% கூறுகளை சீனா வழங்குகிறது. இதே எலக்ட்ரானிக் வாகன பிரிவில் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகும். இந்திய எலக்ட்ரானிக்ஸ் துறையைப் பயன்படுத்தப்படும் கூறுகளில், டிவிக்களில் மொத்தம் 75% பாகங்களும், இதே ஸ்மார்ட்போன்களில் 85% பாகங்களும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையாகும்.