டெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே ஜிடிபி விகிதம் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இது இனி அடுத்து வரும் காலாண்டுகளில் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டின் ஜிடிபி விகிதம் குறித்து கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் சொல்யூசன்ஸ் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் -10.5 சதவீதம் குறையலாம் என கணித்துள்ளது. இது முன்பு -5 சதவீதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜிடிபி கணிப்பு விகிதமானது முதல் காலாண்டில் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினை எட்டியுள்ள இந்த நிலையில் வந்துள்ளது. இது மோசமான நுகர்வு மற்றும் கார்ப்பரேட்டுகளில் வருமானம் வீழ்ச்சி, குறைவான நிதி உதவிகள், நிதி துறையில் நிலவி வரும் நெருக்கடியான நிலை, குறைவான வங்கி மூலதனம், அதிகளவிலான பணவீக்கம் என அனைத்தும் பொருளாதாரத்திற்கு எதிராக உள்ளதாகவும் ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
எனினும் பொருளாதார வளர்ச்சியில் மீட்பு என்பது மூன்றாவது காலாண்டில் இருக்கலாம். எனினும் இந்த வளர்ச்சி மந்தமாகவோ அல்லது சீரற்றதாகவோ இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.
தொழில் துறை குறித்தான பிஎம்ஐ விகிதம், கொரோனா தொற்று நோய்க்கு முன்னதாக இருந்ததை விட குறைவாகவே இருப்பதை எச்சரித்துள்ளது. குறிப்பாக இறக்குமதி, இரு சக்கர வாகன விற்பனை மற்றும் மூலதன பொருட்கள் உற்பத்தி உள்ளிட்டவை இன்னும் மோசமான நிலையில் தான் உள்ளன. இது நாட்டில் வளர்ச்சியானது முடங்கியுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.
கொரோனா வைரஸ் வழக்குகள் இன்னும் சில மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், அது மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க கட்டாயப்படுத்துகின்றன. ஆக பரவலை கட்டுப்படுத்துவதற்காக அவ்வப்போது பணி நிறுத்தங்கள் செய்யப்படுவதும், தளர்வுகளை சுருக்குவதும் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கலாம்.
அதே நேரம் விநியோக சங்கிலி சீர்குலைப்பு மற்றும் வரி அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் விலைவாசி அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் மட்டும் அல்ல, சர்வதேச பொருளாதாரமும் நடப்பு நிதியாண்டில் 4.4% சரியலாம் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.