டெல்லி: 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 12.8 சதவீதமாக வளர்ச்சி காணலாம் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.
முன்னதாக இந்த நிறுவனம் 11% வளர்ச்சி காணும் என்று கணித்திருந்தது. இந்த கணிப்பானது இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகிறது. எனினும் 2023ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.8% ஆக வளர்ச்சி காணும் என்றும் கணித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா மட்டும் அல்ல, உலக நாடுகள் பலவும் லாக்டவுனை அமல்படுத்தின. இதனால் இந்தியாவில் தொழிற்துறைகள் பலவும் முடங்கின. ஏற்றுமதி, இறக்குமதி வணிகங்கள், உற்பத்தி என பலவும் முடங்கின. ஒரு புறம் மக்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டனர், மறுபுறம் பல ஆயிரம் பேர் தங்களது வேலையினை இழந்து தவித்தனர். இதனால் தேவை வெகுவாக முடங்கியது. நுகர்வும் குறைந்தது.
இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி விகிதமானது, 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு 23.9% அளவுக்கு சரிவினை எட்டியது. இதே இரண்டாவது காலாண்டில் 7.5% சரிவினையும், இதே மூன்றாவது காலாண்டில் 0.4% வளர்ச்சியினையும் பதிவு செய்தது.
ஆக நடப்பு நிதியாண்டில் மிக மோசமான நிலையில் தொடங்கி, ஓரளவுக்கு வளர்ச்சி பாதையினை எட்டியுள்ளது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் சரிவினைக் காணலாம் என ஆய்வு நிறுவனங்கள் கணித்து வருகின்றன.
எனினும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பொருளாதார வளர்ச்சிக்கான சாதகமான அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக பிஎம்ஐ விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்தில் சற்றே சாதகமான நிலைக்கு சென்றுள்ளது. இது தேவை மீண்டு வருவதையே சுட்டிக் காட்டுகிறது. அதோடு இது நிதி ஊக்கம், சமூக இடைவெளி, கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது குறிப்பாக உள்கட்டமைப்பு துறை, ஹெல்த்கேர் துறை இராணுவம் என பலதுறைகளிலும் செலவினங்கள் அதிகரித்துள்ளது. ஆக இந்த தளர்வான நிதிக் கொள்கைகள் குறுகிய கால சுழற்சி மீட்டெடுப்பை ஆதரிக்கும். இது நாட்டில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் வளர்ச்சியை ஆதரிக்கும். இது இனி கட்டுப்பாடுகளை தளர்த்த வழிவகுக்கும். இது சேவைத் துறை, நுகர்வு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
எனினும் பலவீனமான நிதித்துறை கடன் வழங்குவதை சற்று கடுமையாக மாற்ற வாய்ப்புள்ளது. குறிப்பாக முதலீட்டு செலவினங்களை கட்டுப்படுத்தலாம்.