இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ரீடெயில் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம், அதன் வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக ஆதித்யா பிர்லாவின் பேஷன் மற்றும் ரீடெயில் வணிகத்தில் 7.8% பங்குகளை வாங்க சிசிஐ அனுமதி கொடுத்துள்ளது.
இது ஆன்லைன் வணிகத்தில் நிலவி வரும் கடும் போட்டிக்கு மத்தியில், பிளிப்கார்ட் நிறுவனம் தன்னை முன்னணி நிறுவனமாக நிலை நிறுத்திக் கொள்ள உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட் நிறுவனம், அதன் முழு உரிமையாளரான பிளிப்கார்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 1,500 கோடி ரூபாய்க்கு, இந்த பங்குகளை வாங்க முன்மொழிந்துள்ளது.
இரு நிறுவனங்களும் ஒப்புதல்
கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஆதித்யா பிர்லா பேஷன் நிறுவனம், பிளிப்கார்ட் குழுமத்திற்கு 7.8 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அனுமதித்தது. இந்த பங்குகளை விற்றபின் ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெயில் நிறுவனத்தின்
விளம்பரதாரர் மற்றும் விளம்பரதார குழு நிறுவனங்கள், சுமார் 55.13 சதவீத பங்குகளை வைத்திருக்கும்.
வளர்ச்சி காண உதவும்
ஆதித்யா பிர்லா நிறுவனம் இதன் மூலம் அதன் இருப்பு நிலைகளை மேம்படுத்தவும், வளர்ச்சியினை துரிதப்படுத்தவும் விரும்புகிறது. இந்த நிலையில் தான் ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெயில் நிறுவனத்தின் பங்குகளை வாங்க சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாக, சிசிஐ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட்டுக்கு உரிமை
பிளிப்கார்ட் - ஆதித்யா பிர்லாவின் இந்த ஒப்பந்தம் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சில உரிமைகளையும் வழங்குகிறது. இது கடந்த 2020ல் நடந்த இரண்டாவது மிகப்பெரிய டீலாகும். முதலாவது கிஷோர் பியானியின், ப்யூச்சர் வென்சர் குழுமத்தின் பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனம் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அர்விந்த் பேஷனுடன் ஒப்பந்தம்
பிளிப்கார்ட் நிறுவனம் மற்றும் பேஷன் நிறுவனமான அர்விந்த் பேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான அர்விந்த் யூத் நிறுவனத்தில் 260 கோடி ரூபாய் முதலீட்டினை செய்வதாக அறிவித்தது. பிளிப்கார்டின் இந்த நடவடிக்கைகள், ரீடெயில் வணிகத்தில் தனது சந்தை பங்கினை உயர்த்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஜியோமார்ட் நிறுவனத்திற்கு கடும் போட்டியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.