இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் ஜியோமார்ட் உடன் போட்டி போட்டு வரும் பிளிப்கார்ட், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் துறைக்குள் நுழைய புதிதாக ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
அமெரிக்க ரீடைல் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் பிளிப்கார்ட் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெக் மோச்சா என்னும் கேமிங் நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
சீனா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளைப் போல் இந்தியாவிலும் தற்போது ஆன்லைன் கேமிங் சேவைகளின் எண்ணிக்கையும், ஆன்லைன் கேமிங் விரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ள காரணத்தால் இதற்கான வர்த்தகச் சந்தை இந்தியாவில் பெரிய அளவில் உருவாகி வருகிறது.
இந்தச் சந்தையைக் கைப்பற்ற ஏற்கனவே பேடிஎம் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் இறங்கியுள்ள நிலையில், தற்போது பிளிப்கார்ட்-ம் இத்துறைக்குள் நுழைந்துள்ளது.
மெக் மோச்சா
ஹலோ ப்ளே என்னும் லைவ் சோசியல் கேமிங் தளத்தை இயங்கும் மெக் மோச்சா பல புதிய கேமிங் தளத்தை உருவாக்கி வருகிறது. பிளிப்கார்ட் இந்நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் புதிதாக உருவாக்கப்படும் கேமிங் தளம் அனைத்தும் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக மெக் மோச்சா நிறுவனம் உருவாக்க உள்ளது.
7 மொழிகள்
மெக் மோச்சா கேமிங் தளத்தில் அனைத்து சேவைகளும் 7 மொழிகளில் வழங்கப்படுவதால் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களும் இதன் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
தற்போது மெக் மோச்சா தளத்தில் லூடோ, கேரம், Snakes & Ladder மற்றும் கிரிக்கெட் போன்ற 10 கேம்கள் உள்ளது.
2011ல் துவக்கம்
மெக் மோச்சா நிறுவனத்தை ஆர்பிதா கபூர், மோஹித் ரங்ராஜு ஆகியோர் இணைந்து 2011ஆம் ஆண்டில் துவங்கினர். இந்நிறுனத்தில் ஏசல் பார்ட்னர்ஸ், ப்ளூம் வென்சர்ஸ் மற்றும் ஷன்வே கேபிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.
மெக் மோச்சா கேமிங் தளத்தில் வாடிக்கையாளர்கள் தினமும் சராசரியாக 35 நிமிடம் செலவு செய்கின்றனர். இதேபோல் 100 மில்லியன் மணிநேரத்திற்கும் அதிகமான அளவிற்கு வாடிக்கையாளர்கள் உரையாடுகின்றனர்.
இந்திய கேமிங் துறை
இன்றைய நிலையில் இந்தியாவில் கேமிங் துறையின் மொத்த வர்த்தகச் சந்தையின் மதிப்பு 6,200 கோடி ரூபாய். சுமார் 85 சதவீத வாடிக்கையாளர்கள் மொபைல் மூலமாகவே கேம்களை விளையாடுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
இந்தியாவில் தற்போது 300 மில்லியனுக்கு அதிகமாகப் பயனர்கள் இருக்கும் நிலையில், 2022ஆம் ஆண்டுக்குள் இதன் எண்ணிக்கை 440 மில்லியனாக உயரும் எனப் பல ஆய்வுகள் கூறுகிறது.