பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த மார்ச் முதல் மே வரையில் 23,000 பேரை பணியில் அமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இருக்கும் வேலையே நிலைக்குமா? பறிபோய்விடுமா? இந்த மாத சம்பளம் வருமா? வராதா? என்ற நிலையே இருந்து வருகிறது.
இந்த ஈவு இரக்கமற்ற கொரோனா அந்தளவுக்கு மக்களை பாடாய்படுத்தி வருகின்றது. பலரின் வேலைகளை பறித்துக் கொண்டுள்ளது. அடிப்படை வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலைக்கு பல லட்சம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எல்லாவற்றையும் விட விலைமதிக்க முடியாத உயிர்களை பலி கொண்டுள்ளது.
இ-காமர்ஸ் துறை
இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் பல துறைகளில் பணியமர்த்தல் என்ற வார்த்தையையே பல நிறுவனங்கள் மறந்துள்ளன. இப்படி இருக்கும் நிலையில் இந்த காலகட்டத்திலும் சில துறைகள் மட்டும் வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டு வருகின்றது. அவற்றில் ஒன்று இ-காமர்ஸ் துறை. ஏனெனில் மக்கள் வெளியில் செல்ல பயந்து வீடுகளுக்குள் பயந்து முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் பொருட்களை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து கொள்கின்றனர்.
23,000 பேர் பணியமர்த்தல்
இதனால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் சராசரியான ஆர்டர்களை காட்டிலும், இந்த கொரோனா காலக்கட்டத்தில் அதிகப்படியான ஆர்டர்களை பெற்று வருகின்றன. அந்த வகையில் அனைத்து ஆர்டர்களையும் கொண்டு சேர்ப்பதற்காக பிளிப்கார்ட் நிறுவனம் டெலிவரி எக்ஸ்கியூட்டிவ் முதல் 23,000 பேரை பணியமர்த்தியுள்ளது.
தேவை அதிகரிப்பு
அதோடு பிளிப்கார்ட் நிறுவனம் ஆர்டர்களை சரியாக சேர்ப்பதோடு, ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத கிருமி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் இ-காமர்ஸ் நிறுவனங்களை நாடுகின்றனர். இதனால் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாகி வருகின்றன.
கடுமையான கட்டுப்பாடுகள்
மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் இந்த இரண்டாவது அலைக்கு மத்தியில் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளார்கள், விற்பனையாளர்கள், மற்ற தொழிற்துறை பார்ட்னர்கள் என பலரின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கிறது. அதன் கிடங்குகளில் கடுமையான கட்டுப்பாடுகளையும், விழிப்புணர்களையும் ஏற்படுத்தி வருகின்றது.