இந்தியாவின் பண்டிகை காலம் தொடங்குகிறதோ இல்லையோ? அதற்கு முன்னரே இ-காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனை திருவிழா ஆரம்பித்து விடுகிறது.
ஒரு புறம் இந்த விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்கள் பெரும் பலன் அடைகிறார்கள் எனில், மறுபுறம் இங்கு விற்பனை செய்யும் இந்த சில நாட்களிலேயே, விற்பனையாளர்களும் நல்ல விற்பனையை பார்க்கின்றனர்.
அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே விற்பனையிலும், அமேசானின் கிரேட் இந்தியன் சேலிலும் விற்பனை களைகட்டியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்காக விற்பனையாளர்கள் லாபம் கண்டு வருகின்றனர்.
கோடீஸ்வரர்களாக மாறிய விற்பனையாளர்கள்
குறிப்பாக பிளிப்கார்டில் 70க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கோடீஸ்வரர்களாகவும், 10,000 மேற்பட்ட விற்பனையாளர்கள் லட்சாதிபதிகளாகவும் உருவெடுத்துள்ளனர் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இந்த விழாக்கால விற்பனையின் முதல் மூன்று நாட்களில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் ஆர்டர்களை பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளது.
பலே விற்பனை
இதில் 60 சதவீதத்திற்கும் மேலான ஆர்டர்கள் டயர் 2 நகரங்களில் இருந்து கிடைத்துள்ளதாகவும் பிளிப்கார்ட் தரவுகள் கூறுகின்றன. மேலும் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், இதன் விற்பனையாளர்களின் இரண்டு நாள் வளர்ச்சியானது, கடந்த ஆண்டு இதே கால விற்பனையின் ஆறு நாட்கள் விற்பனையை சமன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
தேவை அதிகம்
இந்த விற்பனை வளர்ச்சியானது இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோரிடம் இருந்து வரும் தேவையை சுட்டிக் காட்டுகின்றது. பிளிபார்டின் பிக் பில்லியன் டே விற்பனை கடந்த அக்டோபர் 16 அன்று தொடங்கியது. அக்டோபர் 16 மற்றும் அக்டோபர் 17ம் தேதிகளில் பிளிப்கார்டின் மொத்த விற்பனை மற்றும் சிறந்த விலைக் கடைகளில் 3,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள், 18,000 கிரானாக்கள் பேஷன், அணிகலன்கள், மளினை வகைகளில் இயங்குவதைக் கண்டது.
அருமையான தொடக்கம்
பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றுக் கொல்கத்தா போன்ற நகரங்கள் தொடர்ந்து முன்னிலையிலும், டயர் 3 நகரங்களிலும் அதற்கு அப்பாலும், இந்த ஆண்டு கிட்டதட்ட 60% தேவையை கண்டதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பிக் பில்லியன் டே விற்பனையானது அருமையான தொடக்கத்தினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிக் பேஷன் நிகழ்வு
எப்படி எனில் விற்பனை தொடங்கி முதல் 12 மணி நேரத்தில் 1.2 மில்லியன் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். இது இன்று வரை மிந்த்ராவில் மிகப்பெரிய பண்டிகை நிகழ்வாக அமைந்துள்ளது. பிக் பேஷன் நிகழ்வு மூலம் நாங்கள் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று மிந்த்ராவின் தலைமை நிர்வாக அதிகாரி அமர் நாகரம் கூறியுள்ளார்.
அமேசானும் அப்படி தான்
இதற்கிடையில் பிளிப்கார்டின் போட்டியாளரான அமேசான், அதன் விழாக்கால விற்பனையில் முதல் இரண்டு நாளில் நல்ல விற்பனையை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சியாட்டாலை தளமாகக் கொண்ட இந்த ஆன்லைன் நிறுவனம், 48 மணி நேரத்தில் 1.1 விற்பனையாளர்காள் ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் 5,000 மேற்பட்ட விற்பனையாளர்கள் முதல் 48 மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான விற்பனையையும் பதிவு செய்துள்ளனர்.
அமேசான் விற்பனையிலும் மிகப்பெரிய ஸ்பைக்
அமேசானில் இந்த கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஆஃபர் அக்டோபர் 16 அன்று பிரைம் மெம்பர்களுக்காக தொடங்கப்பட்டது. இதே அக்டோபர் 17 அன்று முதல் அனைவரும் அணுகக்கூடிய வகையில் உள்ளது. அமேசான் இந்தியா அதன் தளத்தில் 6.5 லட்சம் விற்பனையாளர்களை கொண்டுள்ளது. இது புதிய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய ஸ்பைக்கினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிறு நகரங்களில் பலே ஆர்டர்கள்
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விற்பனைகளில் 91% பேர் சிறு நகரங்களில் இருந்து வருகின்றனர் என்று அமேசானின் இந்திய துணைத் தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். இவ்வாறு இந்த இரண்டு ஆன்லைன் ஜாம்பவான்களுமே, இந்த விழாக்கால விற்பனையில் கல்லா கட்டியுள்ளனர். இது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான ஒரு நல்ல அறிகுறியே.