நாட்டின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வர்த்தக விரிவாக்கத்தினை தொடர்ந்து செய்து வருகின்றது.
குறிப்பாக தனது ஈ-காமர்ஸ் வணிகத்தினை போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று கொண்டுள்ளது.
அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளில் புல்பிள்மென்ட் சென்டர்களை தொடங்கி வருகின்றது. இது பிளிப்கார்டின் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், விரைவாக சேவையை கொண்டு சேர்ப்பதற்கும் பல முன்னணி நகரங்களில் இந்த விரிவாக்கத்தினை செய்து வருகின்றது.
கோவையில் புல்பில்மென்ட் செண்டர்
அந்த வகையில் தற்போது கோயமுத்தூரில் தனது புல்பிள்மென்ட் சென்டரினை தொடங்கியுள்ளது. இதன் மூலம் குரோசரிகளை டெலிவரி செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளது. இது 1.2 லட்சம் சதுர அடியில் அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு இந்த புல்பிள்மென்ட் செண்டர் மூலம் நேரடியாக 1,200 பேர் வேலை வாய்ப்பினை பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம்
ஆரம்ப கட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே செயல்படத் தொடங்கும் என்பதால், தற்போதைக்கு 500-க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதில் 90% பேர் பெண்களாக இருப்பார்கள் என்றும் பிளிப்கார்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அலுவலகத்தில் கிரெச் சலுகை
பிளிப்கார்ட் அதன் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக, கிரெச் (குழந்தைகளை பேணும் வசதி) வசதியையும் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் திறம்பட செயல்பட ஏதுவாக போக்குவரத்து வசதி மற்றும் உணவையும் வழங்கும் என தெரிவித்துள்ளது.
சொந்த மொழி அனுபவம்
மேலும் இது தென் மாவட்டங்களில் மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு, ஊழியர்களை இன்னும் பணியில் அமர்த்தும். மேலும் சொந்த மொழி அனுபவத்தினை வழங்க பல மொழி அணுகலையும் பிளிப்கார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னைக்கு பிறகு தமிழ் நாட்டில் இரண்டாவது செண்டராகும்.
பாதுகாப்பான முறையில் டெலிவரி
இன்று மின் வணிகத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பிரிவு மளிகையாகும். இது வாடிக்கையாளர்களின் வாசல் தேடி பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையிலும் பூர்த்தி செய்வதில் நாங்கள் முன்னணியில் உள்ளோம். பொருளாதார மையமாக இருக்கும் கோயமுத்தூரில் முதல் கிடங்கினை திறப்பது மகிழ்ச்சி என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாட்டில் பிளிப்கார்டு எட்டு புல்பில்மெண்ட் மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மொத்த பரப்பளவு 1.5 மில்லியன் சதுர அடியாகும். இதில் கிட்டத்தட்ட 150 விநியோக மையங்கள் உள்ளன. இது மாநிலத்தில் 52,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளது. .