ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் அதன் தளத்தில் கிளியர்டிரிப் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது.
இது குறித்த பேச்சு வார்த்தையில் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நடத்தி வரும் நிலையில், இது மற்ற போட்டி நிறுவனங்களாக அமேசான், ஜியோமார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சரியான சவாலாக அமைந்துள்ளது.
அதிலும் தற்போது லாக்டவுனில் தற்போது பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் பயண சேவைகள் அதிகரித்து வருகின்றன.
பயண நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை
இப்படி ஒரு நிலையில் தான் பிளிப்கார்ட் நிறுவனம் கிளியர்டிரிப் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இந்த பேச்சு வார்த்தை கிளியர்டிரிப் மட்டும் அல்ல, மேக்மைடிரிப், யாத்ரா, புக்கிக்.காம், ஈஸ்மைடிரிப் ஆகியவற்றை பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் லாக்டவுன் சமயத்தில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள், தற்போது சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கிளியர் டிரிப்புடன் பேச்சு வார்த்தை
இதனால் இந்த ஆன்லைன் பயண சேவை நிறுவனங்களின் தேவையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தான் பிளிப்கார்ட் நிறுவனம் இப்படி ஒரு அதிரடி திட்டத்தில் இறங்கியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. கொரோனா காரணமாக கிளியர்டிரிப்பின் நிதி செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்கு விற்பனை கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை எதையும் உறுதிப்படுத்த முடியாது.
பல நாடுகளில் சேவை
கிளியர்டிரிப் இந்திய தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் எகிப்திலும் இயங்குகிறது. ஆக இது பிளிப்கார்டின் வணிகத்தினை மேலும் விரிவாக்கம் செய்ய பயன்படும். வால்மார்ட் நிறுவனம் கடந்த 2018ல் பிளிப்கார்ட்-டின் 77 சதவீதம் பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு மேல் கொடுத்து வாங்கியது. இதன் பிறகு அமேசானுக்கு சரியான போட்டி நிறுவனமாகவும் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்திய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நிறுவனம், இந்த பங்கு விற்பனைக்கு பிறகு, அமேசானுக்கு நிகரான போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
கடுமையான போட்டி
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் தங்களது சேவையை வழங்க வேண்டும் என தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. குறிப்பாக சில்லறை வர்த்தகம், டிஜிட்டல் பே, பயணம், இன்சூரன்ஸ், பேஷன், பார்மா என பல துறைகளிலும் தங்களது சேவைகளை விரிவாக்கம் செய்து வருகின்றன. ஒவ்வொரு வகையிலும் தாங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவர் இல்லை என பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக் குவித்து வருகின்றன.
பல நிறுவனங்களுடன் கூட்டணி
பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு வருகின்றன. சிறு உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்கின்றன. இப்படி பல வகையிலும் தங்களது வணிகத்தினை மேம்படுத்தி வருகின்றன. இது சமீபத்தில் புதிய இகாமர்ஸ் நிறுவனமாக உருவெடுத்த ஜியோமார்ட்டுக்கு போட்டியாகவும், அமேசானுக்கும் கடும் போட்டியாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.