ஒவ்வொரு நாடும் அவசர காலத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட அளவிலான கச்சா எண்ணெய்-ஐ முன்கூட்டியே சேமித்து வைத்திருக்கும், இதை strategic crude oil reserve என அழைக்கப்படுகிறது.
இந்தச் சிறப்புச் சேமிப்புக் கிடங்கில் முன்கூட்டியே கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுச் சேமிக்கப்படும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை உயரும் போதும், சப்ளை குறையும், போர் அல்லது இயற்கை பேரிடர் காலத்தில் இந்தச் சேமிப்பு பயன்படுத்தப்படும்.

இப்படி இந்தியாவிடம் சுமார் 39 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சேமிக்கும் தளம் உள்ளது, இந்தக் கச்சா எண்ணெய்யை வைத்து தற்போதைய நாட்டின் சேவையை 8 நாட்களுக்குப் பூர்த்தி செய்ய முடியும். 2020ல் கச்சா எண்ணெய் விலை குறையும் போது மத்திய அரசும், நிதியமைச்சகமும் சேமிப்புக் கிடங்கை முழுவதுமாக நிரப்பியது.
இந்த நிலையில் தற்போது இந்தியா கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் சுமார் 602 மில்லியன் டாலர் அதாவது 5000 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் வாங்கக் கூடிய இடம் உள்ளது. ஆனால் சந்தையில் விலை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு இருக்கும் காரணத்தால் கிடங்கை நிரப்பும் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் விலை குறையும் வாய்ப்புத் தற்போது அதிகமாக இருக்கும் காரணத்தாலும் இந்த முடிவை எடுக்கப்பட்டு உள்ளது. உதாரணமாகப் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் மாத உச்சத்தில் இருந்து பெரிய அளவில் சரிந்துள்ளது. இதேவேளையில் கச்சா எண்ணெய் சப்ளை இதே போல் இருந்தால் கட்டாயம் இதன் விலை குறையத் துவங்கும்.
இதனால் மத்திய நிதியமைச்சகம் 39 மில்லியன் பேரல் நிலத்தடி கச்சா எண்ணெய் சேமிப்புத் தளத்தில் காலியாக இருக்கும் இடத்தைச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அல்லது சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் குத்தகைக்கு விடப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மத்திய நிதியமைச்சகத்தின் இந்த முக்கியமான முடிவிற்குக் காரணம் மத்திய அரசு நாட்டின் நிதிப்பற்றாக்குறையை ஜிடிபி-யில் 5.9 சதவீதமாக மார்ச் மாதத்திற்குள் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 6.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நிதிப்பற்றாக்குறையை மத்திய அரசு தனது strategic crude oil reserve-ல் கச்சா எண்ணெய் வாங்கும் செலவை குறைப்பது மட்டும் அல்லாமல் அதைக் குத்தகைக்கு விடுவது மூலம் புதிய வருமானத்தையும் அரசு பெறும்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் சேமிப்பை விசாகபட்டினம் மற்றும் மங்களூரில் 3 இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்துள்ளது. இதில் மங்களூரில் இருக்கும் 5.5 மில்லியன் பேரல் சேமிப்பு இடத்தை அபுதாபி நேஷ்னல் ஆயில் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications