டெல்லி: நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்கட்டமைப்பு துறையில் 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2024 - 2025ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார இலக்கான 5 டிரில்லியன் டாலர்களை எட்ட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பு துறையில் 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தரமான உள்கட்டமைப்பு வளர்ச்சியான, ஒரு பரந்த, நிலையான வளர்ச்சியை அடைவதற்கு வழி வகுக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக செப்டம்பர் மாதத்தில் உள்கட்டமைப்பு துறையை மேம்படுத்த 2019 - 2020ம் நிதியாண்டிலிருந்து, 2024 - 2025 வரையிலான காலத்தில், 100 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தினை தயாரிக்க விவகார செயலாளார் தலைமையில் பணிக்குழு ஒன்றை அரசு அமைத்திருந்தது. இந்த நிலையில் க்ரீன் பீல்டு மற்றும் பிரவுன் பீல்டு திட்டங்கள் உட்பட 100 லட்சம் கோடிக்கு மேல் செலவாகும் என்றும் இந்த குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பணிக்குழு, ரூ.102 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்து நான்கு மாதத்திற்குள் 70 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையிலேயே 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார். ஆக இந்த நிலையிலேயே இது தொடர்பான திட்டங்களை அடையாளம் காண ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டது என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.15 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கு மட்டும், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில், ஜிடிபியில் 5 - 6 சதவிகித நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 சதவிகித உள்கட்டமைப்பு திட்டங்கள் வளர்ச்சி பாதையில் செல்கின்றன. இந்த வளர்ச்சி திட்டங்களை 22 அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர். 2024 - 25 ஆண்டில் 5 டிரில்லியன் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் 2020 இரண்டாவது காலாண்டில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்கும் என்றும் கூறியுள்ளார்.