இந்தியாவில் டிஜிட்டல் சேவை பெருகிய நாளில் இருந்து இந்தப் போலி கடன் செயலிகள், மோசடி செய்யும் கடன் செயலிகள் தொல்லை அதிகமாகியுள்ளது. கந்து வட்டி கொடுமையை விடவும் இந்தக் கடன் செயலி தொல்லை மிகவும் அதிகமாகியுள்ளது என்றால் மிகையில்லை.
குறிப்பாகக் கடந்த சில மாதத்தில் பல கடன் செயலிகள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டும், வழக்குப் பதிவு செய்யப்பட்டும், தடை செய்யப்பட்டும் வரும் நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சகம் களத்தில் இறங்கியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தேகத்திற்கு இடமான செயலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
டிஜிட்டல் கடன் செயலி
சந்தேகத்திற்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிஜிட்டல் கடன் செயலிகள் மற்றும் அவற்றை அமைக்கவும், இயக்கவும் உதவிய இந்தியர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
துன்புறுத்தல்
பெரும்பாலான சந்தேகத்திற்குரிய செயலிகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்ததாக உள்ளது. இதன் விளைவாக நிறையக் கடன் வாங்குபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், மேலும் இந்தச் செயலிகளால் பணம் பறிக்கப்படுகிறது என்று நிதியமைச்சகத்திற்கு வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது நிர்மலா சீதாராமன் கூறினார்.
RBI வழிகாட்டுதல்
கடன் வழங்குவதில் RBI விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கக்கூடிய சீன நிறுவனங்களால் இயக்க கூடிய சந்தேகத்திற்குரிய டிஜிட்டல் கடன் செயலிகள் குறித்த அறிக்கையைக் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-யிடம் கேட்கப்பட்டது.
முக்கிய அமைச்சகம்
சந்தேகத்திற்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிஜிட்டல் கடன் செயலிகள் தொடர்பாக நிதி அமைச்சகம், கார்ப்பரேட் விவகாரங்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை உட்படச் சில முக்கியத் துறைகள் தொடர்ந்து விவாதித்து, இந்தச் செயலிகள் மீதான வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கச் செயல்பட்டு வருவதாகச் சீதாராமன் கூறினார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை மத்திய வங்கி விரைவில் வெளியிடும் என்று கூறியிருந்தார்.
தற்கொலை
பெரும்பாலான டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவது இல்லை மற்றும் அவை தானாக இயங்குகின்றன. டிஜிட்டல் கடன் செயலிகளின் ஆபரேட்டர்கள் சிலரின் துன்புறுத்தல் காரணமாகக் கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications