டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையினை போக்க மத்திய அரசு ஒரு புறம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தற்போது வரை பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டதாக தெரியவில்லை.
அதிலும் நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 3 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கவிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டெல்லியில், வங்கி மோசடிகளை தவிர்ப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
அதிகாரிகள் நேர்மையான முடிவுகள் எடுக்கும் போது வங்கி அதிகாரிகள் எதற்கும் பயப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ரூபே, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் நிர்மலா சீதாராமன் அப்போது வலியுறுத்தினார்.
என்ன தான் அரசு தொடர்ச்சியாக பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இன்று வரையிலும் பொருளாதாரம் மீளுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இந்த நிலையில் அவர் என்ன பேச இருக்கிறார் என்பது குறித்தான தெளிவான எந்த அறிக்கையும் இல்லை என்றாலும், நிச்சயம் பொருளாதார மந்த நிலையை போக்க புதிய நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் அரசு பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்தும், மத்திய ரிசர்வ் வங்கி இதுவரை ஐந்து முறை வட்டி குறைப்பு செய்தும், செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டு படு பாதளத்திற்கு சென்றது.
அதே போல தொழில் துறையிலும் உற்பத்தி படு வீழ்ச்சி கண்டது. இது குறித்து சர்வதேச நாணயம் நிதியம் உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது இன்று நடக்கவிருக்கும் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பொருளாதாரத்தை மேம்படுத்த சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.