சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக ஏற்கனவே பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக பணவீக்கம் மாறியுள்ளது.
கொரோனாவின் பிடியில் சிக்கி சீரழிந்து வந்த பொருளாதாரம், சமீப காலமாகத் தான் மீண்டு வரத் தொடங்கியது. இதற்கிடையில் தற்போது பணவீக்கத்தின் பிடியில் பொருளாதாரம் சிக்கியுள்ளது. இது மீண்டு வந்து கொண்டுள்ள பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாகவே நுகர்வோர் பணவீக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
3 மாத பணவீக்க நிலவரம்
குறிப்பாக பணவீக்கம் என்பது தொடர்ந்து மூன்று மாதங்களாகவே ரிசர்வ் வங்கியின் இலக்கினை தாண்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இதே கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாகவும், இதே ஜனவரி மாதத்தில் 6.01 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இலக்கு
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க விகித இலக்கு 4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏறக்குறைய 2 சதவீதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த அதிகபட்சம் இலக்கினையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவு பணவீக்கம்
12 உணவு துணை குழுக்களில் 9, மார்ச் மாதத்தில் அதிகரித்தன. இது ரஷ்யா- உக்ரைன் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் உணவு பொருட்களின் விலையானது, மோசமாக அதிகரித்து வரும் நிலையில் , கடந்த மார்ச் மாதத்தில் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதே அழுத்தம் ஏப்ரல் மாதத்திலும் சந்தையில் நிலவி வருகின்றது. ஆக ஏப்ரல் மாதத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல சவால்கள்
இதற்கிடையில் தான் ரிசர்வ் வங்கியும் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கி தவிர்க்க முடியாத சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக உயர் பணவீக்கம் மற்றும் தடுமாறி வரும் பொருளாதார வளர்ச்சி என எதிர்கொண்டுள்ளது.
இத்தகைய நிலையில் தான் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை அதிகரித்துள்ளது.