தொழில்நுட்பம் அதிகமாகி விட்ட இந்த காலத்தில் லெட்டர் எழுதுவது என்பதே மிகவும் அரிதான நிலையில், ஒருசில லெட்டர் எழுதினாலும் அதையும் கொரியர் மூலம் அனுப்பும் வழக்கமும் மக்களிடம் அதிகமாகிவிட்டது.
இதனால் இந்திய அஞ்சல்துறை வருமானம் வெகுவாக குறைந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அஞ்சல் துறை தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குஜராத் மாவட்டத்தில் உள்ள கட்ச் அஞ்சல் நிலையத்தில் ட்ரோன் மூலம் விரைவாக லெட்டர் கொண்டு சேர்க்கும் திட்டம் சோதனை முயற்சியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சல் துறையில் ட்ரோன்
குஜராத் மாநிலத்தில் கட்ச் என்ற மாவட்டத்தில் 46 கிலோ மீட்டர் தூரத்தை 25 நிமிடங்களில் ட்ரோன் மூலம் அஞ்சல்துறை முதல் முறையாக ஒரு பார்சலை அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னோடி திட்டம்
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி கட்ச் மாவட்டத்தில் உள்ள நெர் என்ற கிராமத்திற்கு ட்ரோன் மூலம் அஞ்சல் அனுப்பப்பட்டதுள்ளதாக பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. இது ஒரு ஆரம்பம் என்றும் அஞ்சல் துறையின் இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றி மூலம் எதிர்காலத்தில் ட்ரோன் மூலம் நாடு முழுவதும் அஞ்சல் பார்சல்களை அனுப்ப முடியும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மிகப்பெரிய வெற்றி
மத்திய தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தனது டுவிட்டரில், ' இந்திய அஞ்சல் துறை தனது வரலாற்றில் முதல்முறையாக ட்ரோன் மூலம் பார்சலை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது மிகப்பெரிய வெற்றி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 46 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கை 25 நிமிடங்களில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் அது ஒரு மருத்துவ பார்சல் என்றும் இலக்கை சரியாக அந்த ட்ரோன் கொண்டு போய் சேர்த்ததாகவும் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.
செலவு குறைவு
ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்யப்படுவதால் செலவு குறைவதோடு இரண்டு மையங்களுக்கு இடையே உள்ள தூரம் மிகவும் குறையும் என்றும் அதனால் விநியோக நேரம் மிகக் குறைவாக இருக்கும் என்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்பட எந்த ஒரு பிரச்சனையும் இதனால் இருக்காது என்றும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ட்ரோன்
வணிகரீதியான இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் தபால் பார்சல் டெலிவரி சேவைகளை மிக வேகமாக ட்ரோன் மூலம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களே இன்னும் ட்ரோன்கள் மூலம் பார்சலை அனுப்பும் சோதனை முயற்சி கூட செய்யாத நிலையில் அரசின் அஞ்சல் துறை இந்த சாதனையை செய்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
வருங்காலத்தில் அஞ்சல் துறையில் மட்டுமின்றி விவசாயம் உள்பட பல்வேறு துறைகளில் ட்ரோன் பயன்பாடுகள் இருக்கும் என்றும், இதுவொரு ஆச்சரியமான தொழில் நுட்பம் என்றும் இந்த தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்திக் கொண்டால் நாட்டின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.