பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் எப்போதுமே மக்களின் கவனம் பெறும். தன்னுடைய ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களால் நாட்டுக்கு என்ன நன்மை என்ற கேள்வி பலராலும் முன் வைக்கப்படும் நிலையில் மத்திய அரசே தரவுகளுடன் பதில் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகையும், அதே காலகட்டத்தில் இந்தியா ஈட்டிய அந்நிய நேரடி முதலீடுகள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு மாநிலங்களவையில் வெளியிட்டுள்ளது. இதன்படி, பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக, சுமார் 66,000 ரூபாய் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக மொத்தம் 482.92 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியா 381.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈட்டியுள்ளது. ஒரு டாலரின் மதிப்பு சராசரியாக 83 ரூபாய் என கணக்கிட்டால், இந்த முதலீடு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 31.69 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த இரண்டு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, அரசு செலவிட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் சுமார் 66,000 ரூபாய் வரையிலான முதலீடு ஈட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது ஒரு கணக்கீடு தானே தவிர இந்த முதலீடுகள் நேரடியாக பிரதமரின் பயணங்களால் மட்டுமே வந்ததாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.2021 முதல் 2025 வரை பிரதமர் மோடி 38 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். 2024,2025ஆம் ஆண்டுகளில் தலா 11 வெளிநாட்டு பயணங்களை பிரதமர் மேற்கொண்டிருக்கிறார். நடப்பாண்டில் 6 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
பிரதமரின் உயர்மட்ட பயணங்கள் அந்தந்த நாடுகளுடன் நெருக்கமான உறவை வளர்ப்பதற்கும், இருதரப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த ஒரு முக்கிய வழியாக கருதப்படுகிறது. இந்த பயணங்களின் மூலம் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விநியோக சங்கிலி போன்ற பல்வேறு துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஜூலை 2021 முதல் மேற்கொள்ளப்பட்ட பயணங்களில் மட்டும் மொத்தம் 316 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், புதுப்பிக்கதக்க எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், வேளாண்மை, விண்வெளி தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, செமி கண்டக்டர் உள்ளிட்ட பலதுறைகளில் இந்தியா பல்வேறு நாடுகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிரதமர் மோடியின் இந்த பயணங்களில் கையெழுத்தாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

