அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு இந்தியாவில் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உடன் இணைக்கத் திட்டமிட்டு இருந்த நிலையில், போர்டு தற்போது இம்முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.
போர்டு நிறுவனத்தின் இந்தத் திடீர் அறிவிப்பால், இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டு இருந்த கூட்டணி நிறுவனம் தடை பெற்றுள்ளது. இதோடு போர்டு இந்தியாவில் தொடர்ந்து தனி நிறுவனமாகவே செயல்பட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்டு கார் நிறுவனம்
உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு, இந்தியாவில் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வரும் காரணமாகச் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது வர்த்தகம், இரு தொழிற்சாலைகள் அனைத்தையும் மஹிந்திரா உடன் உருவாக்கும் கூட்டணி நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்தது. இந்தக் கூட்டணி நிறுவனத்தில் மஹிந்திராவின் ஆதிக்கம் சற்று அதிகம்.
இந்திய சந்தை
உலகின் 4வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்கும் இந்தியாவில் போர்டு நிறுவனம் கடந்த 20 வருடங்களாக வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றப் போராடி வரும் நிலையில், தனது சுமைகளைக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டு, மஹிந்திரா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது.
கொரோனா வர்த்தக மாற்றம்
ஆனால் தற்போது கொரோனா காலத்தில் ஏற்பட்ட வர்த்தக மாற்றங்களும், அமெரிக்கச் சந்தையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ள காரணத்தில் போர்டு வர்த்தக எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளது. இதன் வாயிலாகக் கூட்டணி நிறுவனத்தை அமைக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது போர்டு.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஒப்புதல்
போர்டு நிறுவனத்தின் இந்த முடிவை ஆனந்த் மஹிந்திரா தலைமையிலான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா-வும் ஏற்றுக்கொண்ட நிலையில் எவ்விதமான குழப்பம் மற்றும் பிரச்சனையும் இல்லாமல் கூட்டணி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
3 எலக்ட்ரிக் கார்
இதேவேளையில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் விற்பனைக்காக இந்திய தொழிற்சாலையில் 3 எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க உள்ளதாகவும், இதற்கு மஹிந்திரா உதவி செய்ய உள்ளதாகவும் போர்டு தெரிவித்துள்ளது. இதில் முதலாவதாக மிட் சைஸ் எஸ்யூவி எலக்ட்ரிக் காரை போர்டு தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மஹிந்திராவும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா வெற்றி
அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெஸ்லா-வின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதில் போர்டு நிறுவனமும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியா போன்ற சந்தையிலும், மலிவான உற்பத்தி திறன் கொண்ட நாட்டில் இருந்து வெளியேற மனம் இல்லாமல் மஹிந்திரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.