ரெசிஷன் குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் முன்கூட்டியே இதற்குத் தயாராகும் வகையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
ஏற்கனவே ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, டெஸ்லா உட்படப் பல முன்னணி மற்றும் பணப் பலம் நிறைந்த நிறுவனங்கள் அடுத்தடுத்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு பணிநீக்கம் என்னும் சாட்டையைச் சுழற்ற துவங்கியுள்ளது.
போர்டு நிறுவனம்
போர்டு நிறுவனம் தனது வர்த்தக வரலாற்றில் இதுவரை அறிவிக்காத மிகப்பெரிய முதலீட்டு தொகையை எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக அறிவித்துள்ளது. குறிப்பாகத் தனது கார் விற்பனை வர்த்தகத்தை அதிகளவில் சாப்பிடும் டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாகத் தான் இந்த முதலீட்டை அறிவித்தது.
ரெசிஷன் அச்சம்
இந்நிலையில் ரெசிஷன் அச்சம், வர்த்தக மந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் எனப் பல காரணத்தால் முன்னணி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு வரும் நிலையில் போர்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
சிஇஓ ஜிம் ஃபார்லே
புதன்கிழமை வெளியான தகவல் படி போர்டு நிறுவனத்தின் சிஇஓ-வான ஜிம் ஃபார்லே எலக்ட்ரிக் வாகன பிரிவு வர்த்தக மேம்பாடு தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில் IC இன்ஜின் வாகன பிரிவு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் கட்டுப்படுத்த உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.
சென்னை, குஜராத் கார் தொழிற்சாலை
இந்தியாவில் ஏற்கனவே சென்னை, குஜராத் கார் தொழிற்சாலைகளை மூடிவிட்ட போர்டு நிறுவனம் மூடிவிட்ட நிலையில் தற்போது உலகளவிலான வர்த்தகத்தில் இருந்து சுமார் 8000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளது. ஏற்கனவே போர்டு நிறுவனத்தின் அமெரிக்க உற்பத்தி 1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
வால்மார்ட் சிஇஓ டக் மெக்மில்லன்
ரெசிஷன் குறித்த அச்சம் ஒருபக்கம் இருந்தாலும், தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தேவையில்லாமல் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்துவிட்டோமோ என்ற அச்சத்தாலும் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் சில நாட்களுக்கு முன்பு வால்மார்ட் சிஇஓ டக் மெக்மில்லன் பேசினார்.
அதிகப்படியான ஊழியர்கள்
வால்மார்ட் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது சிஇஓ டக் மெக்மில்லன் 2021ல் கொரோனா தொற்றுக்குப் பின்பு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து வெளிவர அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்த காரணத்தால் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.
படுமோசமான நிலை
கிட்டதட்ட இதைப் போன்ற கருத்துக்களைத் தான் தற்போது டிக்டாக், ரெட்பின், ஜேபி மோர்கன் போன்ற முன்னணி நிறுவனங்களும் அறிவித்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கே இந்த நிலைமை என்றால் சிறிய நிறுவனங்கள் படுமோசமான நிலையில் உள்ளது.