இலங்கை துறைமுகங்கள் இந்தியாவிடம் பறிபோக வாய்ப்பு இருப்பதாக இலங்கையின் முன்னாள் கணக்காய்வாளர் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இலங்கை பொருளாதார ரீதியில் தத்தளித்து வருகிறது என்பதும் அந்நாட்டிற்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்தியாவிடம் கடன் வாங்கும்போது இலங்கை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், கடந்த 2500 ஆண்டுகளாக இலங்கையை இந்தியா நாசமாக்கி உள்ளது என்றும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, சீனாவை நம்பலாம்
மேலும் அமெரிக்கா, சீனாவிடமிருந்து கூட இலங்கையை காப்பாற்றிவிடலாம், ஆனால் இந்தியாவிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற முடியாது என்றும், இந்தியா வழங்கும் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் இலங்கையில் உள்ள துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இந்திய ரூபாய்
மேலும் இலங்கையின் ரூபாய் தற்போது படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து இந்திய ரூபாய்களை இலங்கையின் வர்த்தக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படலாம் என்றும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நட்பு நாடு
இலங்கையில் உள்ள தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த போதிலும் இந்திய அரசு இலங்கையை எப்போதும் நட்பு நாடாகவே பார்த்து வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி முதல் முதலாக பதவி ஏற்க பதவியேற்றபோது வந்த விருந்தினர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் இலங்கை அதிபர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இலங்கை மனிதாபிமான வகையில் உதவி செய்யும் இந்தியாவை இலங்கை நட்பு நாடாக பார்க்காமல், வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது இந்தியர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை ஆட்சியாளர்கள்
ஆனால் அதே நேரத்தில் இலங்கையின் முன்னாள் கணக்காய்வாளர் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறினாலும், இலங்கையின் ஆட்சியாளர்கள் இந்தியா மீது நன்மதிப்பை வைத்திருக்கின்றனர் என்பதும், இந்தியாவின் உதவிக்கு அவர்கள் தொடர்ந்து நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.