இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. ஆக அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளதை அனைவரும், ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் கணித்த வளர்ச்சியினை விட, இந்திய பொருளாதாரத்தில் அமைப்பு சாரா துறையில் வீழ்ச்சி அதிகமாக காணப்படுகிறது. ஆக இந்த சூழ்நிலையில் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்தியா 23.9% வீழ்ச்சியினை கண்டுள்ள நிலையில், நம்மை விட கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி 12.4% வீழ்ச்சியினையும், அமெரிக்கா 9.5% வீழ்ச்சியினையும் கண்டுள்ளது. ஆக தற்போது மிக சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அரசு தற்போது நமக்கு தேவை என்றும் ராஜன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸினை கட்டுக்குள் கொண்டு வரும் வரை பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் செலவினங்களை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆக அரசு பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக ஊக்குவிப்பு தொகைகளை அதிகரிக்க வேண்டும். அரசு இதில் தயக்கம் காட்டினால் எதிர்காலத்தில் வளர்ச்சி விகிதம் குறையும்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் உள்ளது, ஆக மக்கள் தங்கள் விருப்பப்படி செலவு செய்வது குறையும். குறிப்பாக ரெஸ்டாரண்ட் சென்று செலவழிப்பது உள்ளிட்ட பல செலவுகள் குறையும். மக்கள் செலவினங்களை அதிகரிக்கும் அதே நேரத்தில், தங்கள் கைகளில் உள்ள நகைகளை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆக மக்களின் செலவினங்கள் குறைப்பால் பல வேலை வாய்ப்புகளும் குறைவாகவே காணப்படும். இது ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கும். ஆக அரசின் மூலம் வழங்கப்படும் நிவாரணங்கள் மிக முக்கியமானவை.
மேலும் மக்கள் வறுமையால் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிப் படிப்பிலிருந்து நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புவார்கள். எந்த வித நிவாரணமும் கிடைக்காத சிறு குறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையினை விட்டு அனுப்புவார்கள். அதோடு வங்கிகளில் வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் தள்ளப்படும். இதனால் வேலையை விட்டு சென்றவர்கள் தங்கள் விருப்பப்படி செலவு செய்ய மாட்டார்கள். இது மேலும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் எனவும் ராஜன் கூறியுள்ளார்.