நிலையான முதலீடுகளை ஊக்குவிக்கும் பொறுப்பு அரசாங்கங்களிடமே இருக்க வேண்டும். மத்திய வங்கிகளிடம் அல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கிகள் அரசியல் ரீதியாக இயக்கப்படும் க்ரீன் முதலீடுகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும். ஏனெனில் நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதற்கான அம்சங்கள் ஏற்கனவே பரவலாக உள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக பணிபுரிந்த ரகுராம் ராஜன், முன்னதாக க்ரீன் முதலீடுகளின் நிதி நிலைத்தன்மை மற்றும் கிரிப்டோ கரன்சிகள் மற்றும் சைபர் செக்யூரிட்டிகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
இதற்கிடையில் தற்போது கிரிப்டோ கரன்சிகள் முறையாக பயன்பாட்டுக்கு வந்தால் அதன் மீது நம்பிக்கை வரும். அதாவது பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகளில் கிரிப்டோ கரன்சிகள் பயன்பாட்டுக்கு வந்தால் நம்பிக்கை அதிகரிக்கும் என ராஜன் கூறியுள்ளார்.
கிரிப்டோ கரன்சிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒழுங்குபடுத்தப்பட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்புக்கும், அவற்றின் அடிப்படைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவாகவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட கரன்சிகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய காலங்களில் கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு என்பது கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றது. கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சில மாதங்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு, தற்போது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
கிரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது கிரிப்டோ கரன்சி விலையினையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.