அமெரிக்கத் தேர்தலுக்கான வாக்குபதிவு துவங்கிய நாட்களில் டிரம்ப் வெற்றிபெறுவார் எனக் கணிப்புகள் வெளியானது, தேர்தல் நாளான நவம்பர் 3ஆம் தேதியை நெருங்கும் நேரத்தில் ஜோ பிடன் தான் வெற்றிபெறுவார் எனக் கணிப்புகள் கூறப்பட்டது. இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் சரி இந்திய பங்குச்சந்தையிலும் சரி எவ்விதமான மாற்றமும் பாதிப்பும் இல்லாமல் இருந்தது.
அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்ட சில மணிநேரத்தில் ஜோ பிடன் முன்னிலை வகித்தாலும் டிரம்ப் தொடர்ந்து கடுமையான போட்டியைக் கொடுத்தால் என்று தான் சொல்ல வேண்டும்.
இதேவேளையில் இந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவைத் துறை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் ரிலையன்ஸ் பங்குகள் வீழ்ச்சி அடைந்த நிலையிலும் மும்பை பங்குச்சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த 5 வர்த்தக நாட்களில் சுமார் 8,381 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
8,381 கோடி ரூபாய்
நவம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் Foreign portfolio investors (FPI) சுமார் 8,381 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதில் 1,817 கோடி ரூபாயை கடன் சந்தையிலும், 6,564 கோடி ரூபாய் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து அசத்தியுள்ளனர்.
அக்டோபர்
அக்டோபர் மாதம் முழுவதிலும் FPI முதலீட்டாளர்கள் வெறும் 22,033 கோடி ரூபாய் தொகை மட்டுமே முதலீடு செய்திருக்கும் நிலையில் வெறும் 5 நாட்கள் வர்த்தகத்தில் 8,381 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கூட்டியுள்ளது.
அமெரிக்கத் தேர்தல்
நவம்பர் 3ஆம் தேதிக்கு முன் வெளியான கருத்துக் கணிப்பில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் டிரம்ப் மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா மீது இருக்கும் GSP தகுதி நீக்கம், விசா கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என்ற நிலை இருந்தது.
ஆனால் நவம்பர் 3ஆம் தேதிக்குப் பின் இந்த நிலை முற்றிலும் மாறிய அமெரிக்கப் பங்குச்சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதன் எதிரொலி தான் இந்திய சந்தையில் குவித்துள்ள 8,381 கோடி ரூபாய் முதலீடு.
சேவை துறை
பிப்ரவரி மாதத்திற்குப் பின் சேவைத் துறை தொடர்ந்து சரிவு பாதையில் இருந்த நிலையில் அக்டோபர் மாதம் 54.1 புள்ளிகளை அடைந்து வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு 49.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி
இதேபோலே அக்டோபர் மாதத்தில் உற்பத்தித் துறையும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில் உற்பத்தித் துறையிலும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி நாட்டின் பொருளாதாரம் மீண்டு விரைவில் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது,.
வர்த்தகச் சந்தை
நவம்பர் மாதம் விழாக்காலம் என்பதால் இந்திய வர்த்தகச் சந்தையில் அதிகளவிலான உற்பத்தி மற்றும் தேவை உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையும் வளர்ச்சி அடைந்து இரண்டு இலக்க பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ஒரு இலக்க பொருளாதார வீழ்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.