இந்திய மக்களைப் பயமுறுத்திய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பு மருந்து போடப்படும் பணிகளுக்காகக் கடந்த வாரம் மாதிரி சோதனை நடந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு முதற்கட்ட கொரோனா தடுப்பு மருந்து வருகிற ஜனவரி 16ஆம் தேதி முதல் மக்களுக்குப் போட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா மருந்து இலவசமாகக் கொடுக்க ஆலோசனை செய்து வருகிறது மத்திய நாடாளுமன்ற சுகாதாரப் பிரிவு குழு.
நிதி நெருக்கடியில் இந்தியா
இந்தியாவின் 130 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து வாங்க சுமார் 57,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகையைச் செலவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான வரி வருமானத்தை இழந்து கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் மத்திய அரசால் இந்த நிதிச்சுமையை ஏற்க முடியாது.
கொரோனா வைரஸ் செஸ்
இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் புதிதாகக் கொரோனா வைரஸ் செஸ் வரியை விதிக்க ஆலோசனையை ஒருபக்கம் செய்து வருகிறது என எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலவசமாகத் தடுப்பு மருந்து
மறுமுனையில் நாடாளுமன்றத்தின் சுகாதாரப் பிரிவு குழு உலகில் பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாகத் தனது நாட்டு மக்களுக்குக் கொடுக்கும் நிலையில் இந்தியாவிலும் இலவசமாக அளிக்க முடியுமா என்பதை ஆலோசனை செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதே குழு கொரோனா தடுப்பு மருந்தை எப்படி நாடு முழுவதும் விநியோகம் செய்வது என்பதையும் மத்திய அரசுடன் இணைந்து ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 16 முதல் தடுப்பு மருந்து
இந்தியாவில் ஜனவரி 16 முதல் சுமார் 3 கோடி மக்களுக்கு முதற்கட்டமாகக் கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க உள்ளது. இதில் முதல்கட்டமாகச் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த மக்கள், இவர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உடன் கொரோனா தடுப்பு மருந்து போடப்பட உள்ளது.
இலவச மருந்து
இதன் மூலம் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பேரில் வரி விதிக்கத் திட்டமிடும் மத்திய அரசு மறுமுனையில் வரி மூலம் பெறப்படும் வருமானத்தின் மூலம் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா வைரஸ் தடுப்பும் மருந்தை அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.