சென்னையின் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக மெரினா கடற்கரை உள்ளது. தினமும் இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். அதுவும் வார இறுதி நாட்களில் கூட்டம் அலை மோதும். இப்படி கடற்கரைக்கு வரக்கூடிய மக்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது.
மெரினா கடற்கரை blue flag beach கடல் அந்தஸ்தை பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மெரினா கடற்கரை வரும் மக்களுக்கு இலவசமாக ஒரு வசதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெரினா மட்டுமல்லாமல் சென்னையின் பல்வேறு கடற்கரையிலும் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி, மெரினா மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை மாநகராட்சி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் மொத்தம் 107 புதிய ஸ்மார்ட் போல்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம் ஒரு பயனர் தினமும் 45 நிமிடங்கள் இலவசமாக வைஃபை பயன்படுத்த முடியும். மெரினாவில் 75 போல்களும், பெசன்ட் நகரில் 20, திருவான்மியூரில் 10 என வைஃபை வசதிகாக ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் ஸ்மார்ட் டவர்கள் நிறுவப்பட உள்ளன.
இந்த உள்கட்டமைப்பு வசதிக்கான செலவுகள், ஏர்டெல், ஹேத்வே உள்ளிட்ட நிறுவனங்களின் CSR நிதியின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே சென்னையின் பல இடங்களில் இவ்வாறு வைஃபை வசதி கொடுக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவற்றில் நெட்வொர் இணைப்பே கிடைப்பதில்லை. எனவே கடற்கரை வைஃபை வசதியில் மாநகராட்சி எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
கடற்கரைக்கு வருகை தருபவர்கள் ஆட்டோ, டாக்சி முன்பதிவு செய்வது, யுபிஐ பணம் செலுத்துவது போன்றவற்றுக்கு கட்டாயம் இணைய சேவை தேவை. எனவே இலவசமாக வைஃபை தருகிறோம் என பெயருக்கு மட்டும் வழங்காமல், அது முறையானதாகவும் அனைத்து இடங்களிலும் நெட்வொர்க் கிடைக்கிறதா என முழுமையாக பரிசோதித்த பின்னரே தர வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க பொது வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்தும்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதாவது பொது வைஃபை பயன்படுத்துவது ஹேக்கர்களுக்கு வழிவகுத்துவிட கூடாது. எனவே, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படாமல் இருக்க, கடுமையான சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செப்டம்பர் முதல் சென்னை கடற்கரைகளில் இலவச வைஃபை வசதி கிடைக்க போகிறது. எந்த நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கும் நெட்டிசன்களுக்கு இது நல்ல செய்தி. இருந்தாலும் வைஃபை சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மக்களுக்கு அதன் முழு பலனும் சென்று சேரும் என்கின்றனர் மக்கள்.


Click it and Unblock the Notifications

