இந்திய ஐடி துறை அதிக அட்ரிஷன் விகிதங்கள் மற்றும் மார்ஜின் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இத்துறையின் பல தலைவர்கள் பிரஷ்ஷர்களின் சம்பள அளவுகள் குறித்துப் பேசி வருகின்றனர்.
இந்தியாவில் சராசரியாக ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும் ஐடி துறையில் தற்போது வர்த்தக மந்த நிலை நிலவும் காரணமாக ஐடி நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கத் துவங்கியுள்ளது.
இதேவேளையில் பல வருடங்களாக ஐடி துறையில் பிரஷ்ஷர்களின் சம்பளம் உயராமல் இருப்பது பெரும் தாக்கத்தைச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
நாஸ்காம்
NASSCOM இன் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் இந்திய ஐடி நிறுவனங்களில் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஒப்பிடும்போது ஐடி துறையில் புதிதாகப் பணியில் சேருபவர்கள் பிரஷ்ஷர்கள் குறைவான ஊதியம் பெறுகிறார்கள். இது இத்துறை நிறுவனங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சினை எனத் தெரிவித்துள்ளார்.
30000 ரூபாய் சம்பளம்
ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் 20000 - 30000 ரூபாய் வரையிலான சம்பளம் வாங்குவது என்பது நாட்டின் பொருளாதாரத்தின் படி மிகவும் மோசமான சம்பளம் இல்லை என்றாலும், அதே நிறுவனத்தின் சம்பளத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது, இது கொடுமை. இது சமன் செய்யப்பட வேண்டும் எனக் கிரண் கார்னிக் தெரிவித்துள்ளார்.
சிஇஓ சம்பளம்
எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தனது ஆண்டறிக்கையில் தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சி.விஜய்குமாரின் ஆண்டு ஊதியம் ரூ.123 கோடி என்று தெரிவித்துள்ளது. மேலும், இன்போசி சிஇஓ சலில் பாரிக் ரூ. 79 கோடியும், விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட் ரூ.79.8 கோடியும், டெக் மஹிந்திரா சிஇஓ சிபி குர்னானி 63.4 கோடி ரூபாயை சம்பளமாகப் பெறுகின்றனர்.
வித்தியாசம்
ஆனால் பிரஷ்ஷர்களின் சம்பளம் கடந்த 15 வருடமாக 15 சதவீதம் கூட உயரவில்லை என்பது தான் உண்மை, இப்படியிருக்கையில் சிஇஓ சம்பளம் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இது பெரும் தவறு எனப் பல அதிகாரிகள் கூறி வருகின்றனர்.