ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்தியாவில் புதிய நிதியாண்டு தொடங்க இருக்கிறது. இதன் பொருட்டு பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இந்த புதிய மாற்றங்கள் நேரடியாக நம்முடைய பட்ஜெட்டிலேயே வேட்டு வைக்கும் வகையில் அமைய இருக்கின்றன என்பதால் பொதுமக்கள் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று எல்பிஜி சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்படும். ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் இந்தியாவில் எல்பிஜி வரத்து குறைந்திருக்கிறது. எனவே சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. கடந்த மாதமே வணிக பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது போரும் நீடிப்பதால் இந்த ஒன்றாம் தேதியிலிருந்து மேலும் விலை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மருந்துகளின் விலை: ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளாக கருதப்படும் பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்பட சுமார் 1000 மருந்துகளின் விலை உயர இருக்கிறது.
யுபிஐ பேமெண்ட்: யுபிஐ பணப்பரிவர்த்தனை, டிஜிட்டல் பேமென்ட்களுக்கு இனி ஓடிபி மட்டுமில்லாமல் கூடுதலாக ஒரு பாதுகாப்பு அடுக்கு சேர்க்கப்படுகிறது. இதன்படி ஓடிபி உடன் சேர்த்து பின் நம்பர் அல்லது நம்முடைய பயோமெட்ரிக் தரவுகளை கொடுத்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் நடைபெறும்.
புதிய வருமான வரி சட்டம்: இந்தியாவில் புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வருகிறது. பழைய வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதன்படி படிவம் 16 நீக்கப்படுகிறது. வருமான வரி செலுத்துபவர்கள், சம்பளதாரர்கள் வருமான வரி மாற்றங்களை தெரிந்து கொள்வது நல்லது. இந்த புதிய வருமான வரி சட்டத்தின் கீழ் பல்வேறு புதிய வரிச் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வரி விலக்கு பெறுவதற்கு சம்பளதாரர்கள் ஆலோசனை செய்யலாம்.
ரயில் டிக்கெட்: ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் புதிய மாற்றத்தை ரயில்வே கொண்டு வந்திருக்கிறது. இதன்படி ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணம் திரும்ப கிடைக்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இது 4 மணி நேரத்துக்கு முன்பு என இருந்த நிலையில் அதனை மாற்றியுள்ளனர். மேலும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீத தொகையும் 72 நேரத்திற்கு முன்பு செய்தால் முழு கட்டணமும் திரும்பத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட்டை மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட் அதாவது ரயிலில் ஏறக்கூடிய நிலையத்தை மாற்றலாம்.
தொழிலாளர் சட்டம்: ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வருகிறது என்பதால் நம்முடைய சம்பள கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படும். அதே போல அடிப்படை சம்பளம், அலோவென்ஸுகள் , வேலையை ராஜினாமா செய்தால் சம்பள பாக்கி தருவது உள்ளிட்ட அனைத்துமே மாறுகிறது.


Click it and Unblock the Notifications