இந்தியாவில் ஏற்கனவே பணவீக்கம் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் அனைத்தும் விலை அதிகரித்து இருக்கும் இந்த வேளையில் மக்களுக்குப் புதிய நெருக்கடி ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் வந்துள்ளது.
இதன் மூலம் மார்ச் மாதம் நடுத்தர மக்களின் குடும்பப் பட்ஜெட்டில் மிகப்பெரிய துண்டு விழுவது மட்டும் அல்லாமல் நுகர்வோர் சந்தையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கும் மோசமான நிலை உருவாகியுள்ளது.
இது வெறும் விலைவாசி மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புப் பாதிப்பு வரையில் கொண்டு செல்லும் என்பது தான் உண்மை.
சூரியகாந்தி எண்ணெய்
இந்தியா உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா அதிகப்படியான சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட எண்ணெய், புதிய ஆர்டர் செய்யப்பட்ட எண்ணெய் அனைத்தும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளது.
எண்ணெய் ஆர்டர்
போர் பதற்றத்தால் உக்ரைன் நாட்டில் அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் ஆர்டர் செய்யப்பட்ட எண்ணெய் இந்தியாவுக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை மார்ச் மாதத்தில் இருந்து பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமாயில் விலை
மேலும் பாமாயில் விலை ஏற்கனவே சிங்கப்பூர் சந்தையில் அதிகரித்துள்ளதாலும், சூரியகாந்தி எண்ணெய் வருகை குறைந்துள்ளதாலும் சமையல் எண்ணெய் விலை ஒரு லிட்டர் கட்டாயம் 200 ரூபாயை நெருங்கி விடும்.
உற்பத்தி பொருட்கள்
இதேபோல் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகக் காப்பர், அலுமினியம், ஸ்டீல், பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலை சப்ளை டிமாண்ட் பிரச்சனை, பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக விலை தாறுமாறாக உயர துவங்கியுள்ளது. இதனால் இந்த 5 பொருட்களை நம்பி இருக்கும் அனைத்து துறைகளும் பாதிப்பு தான்.
விலை உயர்வு
இதன் மூலம் டிவி, ஏசி, பிரிட்ஜ், கார் போன்ற அனைத்து பொருட்களின் விலையும் மீண்டும் ஒரு முறை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை விரைவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல்
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கட்டாயம் உயரும் நிலை இருப்பதால், போக்குவரத்துச் செலவுகள் மூலம் அனைத்து விற்பனை பொருட்களும் மார்ச் மாதம் முதல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதும் தெரிகிறது.