கடனில் தொடங்கி கோடிகளுக்கு அதிபதியான தொழில்நுட்ப வல்லுநர்.. இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருக்காரா..?

பெங்களூருவை சேர்ந்த டெக் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், சமீபத்தில் ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் தனது வாழ்க்கை மற்றும் நிதி சம்பந்தமாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பளத்துடன் தனது தொழில்முயற்சியை தொடங்கிய அவர், இன்று ஆண்டுக்கு ரூ.2.5 கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறார். ஆனால், இவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் பல உள்ளன. தந்தையின் இழப்பு, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், கடன் சுமைகள், உடல்நலப் பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகளை அவர் சந்தித்துள்ளார். ஆனால், இவ்வளவு பிரச்சனைகளையும் கடந்து, அவர் இன்று தன்னைத் தானே செதுக்கியுள்ளார்.

இவரின் தந்தை ஒரு அரசு ஊழியராக பணியாற்றியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும், அவர் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். புதிய வேலை, புதிய சம்பளம் என்றதும், பல இளம் தொழில்முனைவோரைப் போல், அவரும் அதைக் கொண்டாட தொடங்கினார். தனது நண்பனுக்குச் சமமாக ஒரு கார் வாங்க கார் கடன் எடுத்துள்ளார்.

கடனில் தொடங்கி கோடிகளுக்கு அதிபதியான தொழில்நுட்ப வல்லுநர்.. இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருக்காரா..?

ஆனால், வாழ்க்கையின் கடினமான சூழல், அந்த சமயம் அவரை நிலைகுலைய வைத்தது. அவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் 50 நாட்கள் ஐ.சி.யூவில் இருந்தார். அந்த நேரத்தில், நிறுவன மருத்துவ காப்பீடும் முடிந்து போனது. பின்னர், அவர் மற்றும் அவரது சகோதரி தலா ரூ.5 லட்சம் தனிப்பட்ட கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். ஆனால், மருத்துவ செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால், அவரது தந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் உபகரணங்களை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் கடனைத் தீர்க்கவும், அவரது சகோதரியின் திருமணச் செலவுகளுக்கும் பணம் தேவைப்பட்டதால், தங்கள் பூர்வீக வீட்டை விற்கும் நிலைக்கு அந்த குடும்பத்தினர் தள்ளப்பட்டனர்.

மேலும், சொத்து உரிமையைப் பற்றிய உறவினர்களுடன் ஏற்பட்ட வழக்குப் பிரச்சனை, குடும்பத்தின் மீது கூடுதல் மன அழுத்தம் ஏற்படுத்தியது. இந்த அனுபவங்களின் பின்னர், அவருக்கு ஒரு தெளிவான உணர்வு வந்துள்ளது. நிறுவன மருத்துவக் காப்பீடு மட்டும் போதாது. தனிப்பட்ட மருத்துவக் காப்பீடும், வாழ்நாள் காப்பீடும் ஒரு குடும்பத்தை பாதுகாக்க நிச்சயமாக தேவை என்பதை அவர் உணர்ந்தார்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் வேலை செய்யும் ஆசை இருந்தபோதும், தனது தாயை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், அந்த நபர் இந்தியாவிலேயே தங்கினார். பின்னர், தனது தொழில்துறையில் அவர் இயக்குநர் பதவிக்கு உயர்ந்தார். இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் மிக உயர்ந்த ஊதியம் வழங்கப்படும் இடங்களில் வேலை வாய்ப்பையும் பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டுக்குள் அவரது ஆண்டு வருமானம் சுமார் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சமாக இருந்தது. மேலும், எவ்வித கடனும் இல்லாமல் 2-வது வீடும் வாங்கினார்.

ஆனால், விதி அவரையும் விடவில்லை. வேலை அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை, சீரற்ற உணவுமுறை ஆகியவற்றால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில், அவர் ஒரு வயதான குழந்தைக்கு தந்தையாகவும், உயர் பதவியிலும் இருந்ததால், இந்த சம்பவம் அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அந்த அனுபவம் அவரது வாழ்க்கை முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வைத்தது. பின்னர், ஓராண்டு கட்டுப்பாடான வாழ்க்கை முறை மாற்றங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் குணமடைந்து "ஆரோக்கியமே முதன்மை" என்ற நோக்கத்தில் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

வருமானம் கோடிகளில் சென்றபோதும், உண்மையான செல்வம் என்ன என்பதை அவர் நேரில் உணர்ந்தார். ஆரம்பத்தில், தானாகவே முதலீடுகளை நிர்வகிக்க முயன்ற இவர், அதிகமான பலனை பெற முடியாமல் வேதனை அடைந்தார். பின்னர், SEBI-யில் பதிவு செய்யப்பட்ட, கட்டணத்திற்கு மட்டுமே ஆலோசனை தரும் நிதி திட்டமிடல் நிபுணரை சந்தித்ததில் இருந்து திடீர் திருப்புமுனை ஏற்பட்டது.

அவரது ஆலோசனையின் பேரில், சிக்கலற்ற முதலீட்டு திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கினார். முக்கியமாக அளவீட்டு (index) நிதிகள் மற்றும் நேரடி மியூச்சுவல் ஃபண்டுகள் (direct mutual funds) வழியாக முதலீடு செய்தார். இந்த மாற்றம், விலை ஏற்றத்தை மிஞ்சும் வருவாயை தரத் தொடங்கியது. இன்று, அவரிடம் எந்தக் கடனும் இல்லை. ரூ.4.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், ரூ.10 கோடி மதிப்புள்ள திரவ சொத்துகளும், ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளமும் பெற்று வருகிறார்.

இவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சேர்த்தாலும், அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறார். இன்னும் ஒரு மாருதி காரை வைத்து தான் சுற்றி வருகிறார். செலவுகளை மிகவும் பார்த்து பார்த்து செய்கிறார். நிதி சுதந்திரம் தான் அவரை தனது விருப்பமான பணியில் ஈடுபடவும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும் முக்கிய காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கைப் பயணத்தைச் சிந்தித்துப் பார்ப்பதற்கும், பிறருக்கு ஒரு பாடமாக சொல்லுவதற்கும் அவர் நேரம் எடுத்துக் கொண்டார். "உயர்ந்த வருமானம் மட்டும்தான் செல்வம் அல்ல. ஒழுங்கான சேமிப்பு, புத்திசாலியான முதலீடு, போதுமான காப்பீடு மற்றும் சிந்தித்து செலவழிக்கும் பழக்கமே உண்மையான நிதி நலம்" என்று பதிவிட்டுள்ளார். குறிப்பாக அவரது முக்கியமான அறிவுரை என்னவென்றால், தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் நன்றியுடன் வாழுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+