பங்குச்சந்தை என்பது ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றாலும் ஒரு சில நல்ல பங்குகள் மார்க்கெட் வீழ்ச்சி அடையும் போது இறங்கினாலும், மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும்போது நல்ல லாபம் கொடுக்கும் என்பது தெரிந்ததே.
ஆனால் ஒரு சில பங்குகள் மார்க்கெட் ஏற்றத்தில் இருந்தாலும் இறக்கத்தில் இருந்தாலும் இறங்கி கொண்டே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில பங்குகள் உச்சத்தில் இருந்து திடீரென வீழ்ச்சி அடைந்து அதல பாதாளத்திற்கு செல்லும் நிலைமையும் ஏற்படலாம். அவ்வாறு உச்சத்தில் இருந்து பாதாளத்திற்கு சென்ற 4 பங்குகள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. PC ஜூவல்லர்
2018ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சத்தில் இருந்த PC ஜூவல்லர்பங்குகள் திடீரென சில மாதங்களில் பாதாளத்திற்கு சென்றது. 2018 ஆம் ஆண்டில், PC ஜூவல்லர் பங்கின் விலை அதன் உச்சத்தில் சுமார் ரூ. 600 ஆக இருந்த நிலையில் அந்த பங்கு இன்று வெறும் ரூ.55 க்கும் குறைவான விலையில் உள்ளது.
ஒரே நாளில் 60% வீழ்ச்சி
PC ஜுவல்லர் தற்போது தங்க நகைகள், வைரம் பதித்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் வர்த்தகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நன்றாக இருந்த இந்த பங்கு ஒரே நாளில் 60% வீழ்ச்சி அடைந்தது. அதன்பின் தொடர் வீழ்ச்சியில் தான் இந்த பங்கு உள்ளது.
2. யெஸ் வங்கி
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யெஸ் பேங்க் பங்கின் விலை அதுவரை இல்லாத அளவு ரூ.393 என்ற விலையில் இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சரிந்து ரூ.11க்கும் கீழே சென்று பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
பரிந்துரை செய்வதில்லை
தற்போது நிலவரப்படி, யெஸ் வங்கி மீண்டு வருவதாக தெரிகிறது. 2020 ஆம் ஆண்டின் புனரமைப்புத் திட்டத்திலிருந்து வெளியேறியதால், வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஆனாலும் இந்த வங்கியின் பங்குகளை வாங்க எந்த நிதி ஆலோசகர்களும் பரிந்துரை செய்வதில்லை என கூறப்படுகிறது.
3. HDIL
2007ஆம் ஆண்டு ஜூலையில் உச்சத்தில் இந்த பங்கின் விலை இருந்தது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.434 என இருந்த இந்த பங்கு திடீரென அதிகபட்சமாக ரூ.1,084 ஆக உயர்ந்தது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.299 பில்லியனாக உயர்ந்தது. இந்த உயர்வு காரணமாக HDIL இந்தியாவின் மூன்றாவது பெரிய ரியாலிட்டி டெவலப்பர் என்று கருதப்பட்டது. ஆனால் 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியாக இந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்து ரூ.70 என மிகக்குறைந்த விலையில் வர்த்தகம் ஆனது.
கடன் மற்றும் மோசடி
HDIL நிறுவனத்தின் அதிகபட்ச கடன் மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியவை மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி இந்நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மிகப்பெரிய மோசடி செய்ததாகவும், இதனால் இந்நிறுவனம் அதள பாதாளத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
4. DHFL
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, DHFL நிறுவனத்தின் பங்குகள் 2,000%க்கு மேல் உயர்ந்தது. 1998ஆம் ஆண்டு ரூ.5.50ல் இருந்த இந்த பங்கின் விலை 10 ஆண்டுகளில் ரூ.120 ஆக உயர்ந்தது. பின்னர் 2009ஆம் ஆண்டில் இருந்து 75%க்கும் மேலாக சரிந்து ரூ.25 என சரிந்தது.
கடன்
DHFL நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததற்கும் பெரும் கடன் நெருக்கடி தான் காரணமாக கூறப்பட்டு வருகிறது. மேலும் DHFL புரமோட்டர்கள் ரூ.310 பில்லியன் மோசடியில் ஈடுபட்டதாகவும் அறிக்கை ஒன்று கூறியுள்ளது.