டெபிட், கிரெடிட் கார்டுகளை ஆன்லைனில் பயன்படுத்த அக்டோபர் 1-ம் தேதி முதல் டோக்கனைசேஷன் என அழைக்கப்படும் தனி அடையாளப்படுத்தும் முறை அமலுக்கு வர இருக்கிறது.
இந்த டோக்கனைசேஷன் முறை அமலுக்கு வந்தால், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை ஆன்லைனில் செய்யும் போது கார்டு எண் மற்றும் சிவிவி எண்ணிற்குப் பதிலாக டோக்கனைசேஷன் எண் தேவைப்படும்.
இந்த டோக்கனைசேஷன் எண்ணை ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது பயன்படுத்தினால் கார்டு எண் மற்றும் சிவிவி எண்ணை சேமிக்க முடியாது.
அக்டோபர் 1
அக்டோபர் 1-ம் தேதி முதல் இ-காமர்ஸ், உணவு டெலிவரி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவை என எந்த பரிவர்த்தனைகளாக இருந்தாலும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது டோக்கனைசேஷன் முறை கட்டாயம். ஏற்கனவே பரிவர்த்தனை செய்து வந்தாலும் அப்போது சேமிக்கப்பட்ட காலாவதி தேதி உள்ளிட்ட எல்லா கார்டு விவரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
டோக்கன்
புதிய முறைப்படி கார்டு பரிவர்த்தனை செய்யும் போது தனித்துவமான எண் வழங்கப்படும். அதனைத்தான் வணிகர்களால் சேமிக்க முடியும். ஒவ்வொரு வணிகர்களுக்கு புதுப்புது டோக்கன் வழங்கப்படும். இதற்கான கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
பாலமாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்கள்
ரேசர் பே, போன் பே, வர்ல்டு லைன் மற்றும் பைன் லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வங்கிகள், வணிகர்களிடையில் இந்த டோக்கனை வழங்கும் பாலமாகச் செயல்பட்டு வருகின்றன.
போன் பேன்
போன் பே பயனர்களில் 80 சதவீதத்தினர் அவர்களது கார்டுகளுக்கு டோக்கன் எண்ணை பெற்றுள்ளார்கள். இதுவரையில் 1.4 கோடி நபர்கள் கார்டுகளுக்கு டோக்கன் எண் முறையை ஆக்ட்வேட் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
வெளிநாடு கார்டுகள்
இந்த டோக்கன் முறை இந்தியாவிலிருந்து சேவை வழங்கும் ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு மட்டும் தான் என்றும், சர்வதேச நிறுவனங்களுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான கார்டுகளை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும். எனவே விரைவில் அவர்களும் ஆர்பிஐ மூலம் டோக்கன் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் ஆர்பிஐ டோக்கன் முறை அமலுக்கு வருவதால் இனி இந்தியாவில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை ஏற்காது. ஆப்பிள் வால்லெட் சேவை மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும் என ஏப்ரல் மாதம் தெரிவித்தது.
காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
இந்த டோக்கன் முறை 2021 டிசம்பர் மாதமே அமலுக்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் வணிகர்கள் தொழில்நுட்பங்களை உருவாக்க நேரம் வேண்டும் என கேட்டுக்கொண்டதால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏன் இந்த டோக்கன் முறை?
இந்திய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி சர்வதேச இணையதளங்களில் மோசடி பரிவத்தனைகள் அதிகளவில் நடக்கிறது. அதற்கு இந்த சேவைகளில் கார்டு விவரங்களைச் சேமிப்பதே காரணம். எனவே அதனைக் குறைக்க டோக்கன் முறையை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.