தற்போது டெக் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளத்திற்கு வேலை செய்தாலும் வேலைக்கு உத்தரவாதம் இல்லை. அந்த ஒரு மெயில் வந்துவிட்டால் யாராக இருந்தாலும் வேலையை விட்டு நீக்கப்பட்டது தான், ஒன்றுமே செய்ய முடியாது. இரு தினங்களுக்கு முன் கூட oracle டெக் நிறுவனம் திடீரென ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்தது.
ஒரு திடீர் பணிநீக்கம் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். ஆனால் இதே ஆராக்கிள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர், இன்று வேகமாக வளர்ந்து வரும் தொழில்முனைவோராக மிளிர்கிறார். பிரதீப் கண்ணன் தமிழ்நாட்டின் கரூர் பகுதியை சேர்ந்தவர். ஆராக்கிள் நிறுவனத்தில் பெங்களூருவில் முக்கிய பதவியில் இருந்தவர் , மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றவர்.

2019 ஆம் ஆண்டில், பிரதீப் கண்ணன் தனது 33ஆவது வயதில் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு முடிவை எடுத்தார். திடீரென வேலையை விட்டுவிட்டு தனது சொந்த ஊரான கரூருக்கு திரும்பினார். சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி The Falooda Shop என்ற ஃபல்லூடா விற்கும் கடையை தொடங்கினார். ஏற்கனவே பெங்களூருவில் Lets Kulfi என்ற பெயரில் குல்பி கடை நடத்தினார், அந்த தொழில் ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும், பின்னர் கடையை மூடும் நிலை உண்டானது.
இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று கொண்ட அவர் 100% நம்பிக்கையை முதலீடாக கொண்டு தொடங்கியது தான் The Falooda Shop. 2019ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் சேர்ந்து முழு நேரமாக இந்த தொழிலில் இறங்கினார். கரூரில் உள்ள காந்தி கிராம் அருகில் 10x10 அடி அளவிலான சிறிய கடையை தொடங்கினார். இதற்காக இவர் செய்த முதலீடு 6 லட்சம் ரூபாய்.
வேலையை விட்டுவிட்டு சிறிய கடை வைப்பதை பார்த்து பலர் சிரித்ததாகவும், விமர்சித்ததாகவும் அவரே எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் தரமான பொருளுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்த அவர், தனது கடையை படிப்படியாக விரிவாக்கம் செய்தார். 2020 ஆம் ஆண்டில் கரூரிலேயே முதல் Franchise கடை திறக்கப்பட்டது. Franchise-Owned, Franchise-Operated என்ற வணிக முறையை பின்பற்றினார். அதாவது கடையை உரிமையாளர் சொந்தமாக நிர்வகிப்பார், ஆனால் பிராண்ட் பயிற்சி, மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இவரது நிறுவனம் வழங்கும்.
ஒரு சிறிய கடையாக தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் சேர்த்து துபாய் உட்பட 18 கிளைகளை கொண்டுள்ளது. பாரம்பரிய ஃபல்லுடா மற்றும் ஐஸ்கிரீம்களை தாண்டி, தற்போது பானங்கள் இதர இனிப்பு வகைகள் மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட ready-to-eat falooda போன்ற புதுமையான தயாரிப்புகளையும் கொண்டு வந்துள்ளார்.
தென்னிந்தியாவை தாண்டி தற்போது வட இந்தியாவிலும் தன் காலடியை பதித்துள்ள இந்நிறுவனம், குர்கான் பகுதியில் தனது புதிய கடையை திறப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதனை அவரே தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். தற்போது இவரது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 9 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் பிரதீப் கண்ணன் ஐஸ்கிரீம் பிராண்ட் ஒன்றையும் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


