தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் சூர்யா. தந்தை சிவக்குமார் நடிகராக இருந்த போதிலும் தன்னுடைய சுய உழைப்பால் திரையுலகில் கால்பதித்து தவறுகளில் இருந்து பாடம் கற்று கொண்டு தற்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.
சூர்யா நடிப்பு மட்டுமில்லாமல் தன்னுடைய சமூக பணிகள் மூலமாகவும் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மாறி இருக்கிறார். அவருடைய 51ஆவது பிறந்த நாள் இன்று. ஆனால் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை குறிப்பிட்டு இந்த தருணத்தில் ரசிகர்கள் யாரும் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அறிவித்து இன்னும் ரசிகர்களிடம் ஒரு படி மேலே உயர்ந்துள்ளார்.

சரவணன் சிவக்குமார் என இயற்பெயர் கொண்ட சூர்யா, 1990களின் பிற்பகுதியில் தமிழ் திரையுலகில் நடிகராக கால் பதித்தார். சூர்யா நடித்த முதல் படம் நேருக்கு நேர். திரையுலகில் கால் பதிக்கும் முன்பு சூர்யா ஒரு கார்மென்ட்ஸில் வேலைக்கு சென்றுள்ளார். கிட்டதட்ட ஓராண்டு காலம் தான் நடிகர் சிவகுமாரின் மகன் என்பதை வெளிப்படுத்தாமலேயே வேலை செய்துள்ளார். அப்போது அவருக்கு சம்பளம் 750 ரூபாய்.
முதலில் சூர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு தந்தது இயக்குநர் வசந்த். அஜீத்தின் ஆசை பட வாய்ப்பு வந்த போது நடிப்பில் ஆர்வம் இல்லை என கூறி விட்டாராம். பின்னர் நேருக்கு நேர் படத்தில் விடாப்பிடியாக சூர்யாவை நடிக்க வைத்துள்ளார் வசந்த். அங்கிருந்து தனது கடின உழைப்பால் முன்னேறிய சூர்யா, நந்தா, பேரழகன், வேல், பிரண்ட்ஸ், சிங்கம் , வாரணம் ஆயிரம், கஜினி, கருப்பு என பல வெற்றி படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவின் மிகவும் மதிக்கப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

தந்தை ஒரு நடிகராக இருந்த போதும் சூர்யாவின் வெற்றிக்கு பின்னால் இருப்பது முழுமுழுக்க அவரது உழைப்பு தான். நந்தா, காக்க காக்க ஆகியவை சூர்யாவுக்கு பெரிய இமேஜை உருவாக்கிய படங்களாக அமைந்தன. கதாபாத்திரத்துக்கு ஏற்ப கெட்டப்பை மாற்றுவதில் வல்லவர். சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் ரசிகைகளே அதிகம். குறிப்பாக நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சூர்யா - ஜோதிகா தம்பதி பல இளம் தம்பதிகளுக்கும் ரோல் மாடலாக மாறியுள்ளார். சினிமா, குடும்பம், சமூக பணி , உடலை ஃபிட்டாக வைத்து கொள்வது என அனைத்திலுமே 100 மதிப்பெண் கொண்ட தம்பதி என கூறலாம்.
சூர்யாவை பொறுத்தவரை மொத்தமாக 350 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது. சென்னை மற்றும் மும்பையில் ஆடம்பர வீடுகளை வைத்துள்ளார். ஒரு படத்திற்கு சுமார் 60 கோடி ரூபாயை இவர் சம்பளமாக பெறுகிறார் என சொல்லப்படுகிறது.
திரையுலகின் மிகவும் விரும்பப்படும் தம்பதிகளில் ஒருவராக சூர்யா - ஜோதிகா திகழ்கின்றனர். Koimoi தளத்தின் தகவலின்படி, இவர்களது மொத்த சொத்து மதிப்பு சுமார் 537 கோடி ரூபாய் ஆகும்.அண்மையில் இந்த தம்பதி மும்பையில் வாங்கியுள்ள சொகுசு வீட்டின் மதிப்பு சுமார் 70 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா - ஜோதிகா தம்பதி 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர், இதன் மூலமும் அவருக்கு கணிசமான வருமானம் வருகிறது. சூர்யா அகரம் என்ற கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை மாணவர்களின் கல்வி செலவுக்காக நிதி வழங்குகிறார். நீட் தேர்வினை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர். இதனால் தான் நீட் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் வேளையில் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என கூறியுள்ளார். நடிகராக இருந்தோமா சம்பாதித்தோமா என நின்று விடாமல் தன்னுடைய புகழ் , பெயர் ஆகியவற்றை கொண்டு சமூக பணிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.


Click it and Unblock the Notifications

