ஹார்ட்வொர்க்கை விட ஸ்மார்ட்வொர்க் தான் சிறந்தது என்று பலர் கூறக் கேட்டிருப்போம் அதை உண்மையில் நிரூபித்திருக்கிறார் வாரணாசியைச் சேர்ந்த டீச்சர் ஒருவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கடின உழைப்பு தேவைதான். ஆனால் கடின உழைப்பு மட்டும் இருந்தால் நினைக்கும் சம்பளத்தை எட்டி விட முடியாது. அதற்கு பயிற்சி, முயற்சி அதோடு அன்றைய மார்க்கெட்டில் என்ன தேவை இருக்கிறது? என்பதையும் ஆராய வேண்டும். இதையெல்லாம் சரியாக திட்டமிட்டு செய்ய தொடங்கிவிட்டால் நீங்கள் நினைக்கும் தொழிலில் நிச்சயம் வெற்றி அடைந்து விடுவீர்கள்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணமாய் திகழ்கிறார் வாரணாசியைச் சேர்ந்த பெண். அவருடைய கதை தான் தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தை விட்டு தூரத்து ஊரில் தங்கி இருக்கிறார். அங்கு வீடு வீடாய் சென்று குழந்தைகளுக்கு டியூஷன் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மாதம் ரூ.9,000 மட்டுமே சம்பளமாக கிடைத்துள்ளது. இன்றைய செலவுகளுக்கும், அவர் வாங்கும் சம்பளத்திற்கும் கண்டிப்பாக பொருத்தமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ரூ.9,000 சம்பளத்தை வைத்துக்கொண்டு செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். அப்போது தான் அவருடைய நண்பர் அங்கித் பாண்டே அவருக்கு ஒரு அருமையான யோசனையை வழங்கியுள்ளார். "உனக்கு தான் சமையல் நன்றாக வருமே! நீ ஏன் ஒரு கிளவுட் கிட்ச்சனை தொடங்கக்கூடாது!", என்று தனது தோழிக்கு ஒரு ஐடியாவைக் கொடுத்துள்ளார்.

அவர் அன்று கொடுத்த ஐடியா இன்று அந்தப் பெண்ணிற்கு மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளத்தை பெற்று தருகிறது. அங்கித் கொடுத்த ஐடியாவால் வளர்ந்த தோழியின் கதையை தனது X பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "என் தோழி வாரணாசியில் தினமும் 4 முதல் 5 மணி நேரம் குழந்தைகளுக்கு வீடு வீடாய் சென்று டியூஷன் எடுத்து மாதம் ரூ.9.000 சம்பாதித்து வந்தார். ஆனால் இன்று தன்னுடைய கிளவுட் கிச்சன் தொழில் மூலமாக மாதத்திற்கு ரூ.1.25 லட்சம் வருமானம் பெற்று வருகிறார். இதனால் தான் வெற்றி பெற ஹார்ட்ஒர்க் மட்தும் போதாது என்று சொல்லப்படுகிறதோ? என எழுதி போஸ்ட் செய்திருந்தார்.
அதோடு தன் குடும்பத்தை விட்டு தனியாக இருந்த தோழிக்கு வாடகை, மின்சாரம், உணவு என அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாத நேரங்களில் தனது தந்தையிடம் பணம் கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அங்கித் தெரிவித்திருந்தார்.
கிளவுட் கிட்ச்சன் தொழில் செய்ய முதல் முதலாக ரூ.30,000 வரை முதலீடு தேவைப்பட்டுள்ளது. அந்தப் பெண் தன்னிடம் இருந்த ரூ.10,000 சேமிப்பை பயன்படுத்தியுள்ளார். அப்போது அவருடைய நண்பர் அங்கித் மீதி ரூ.20,000 கொடுத்து உதவியுள்ளார். எந்த தொழிலானாலும் சரி, எடுத்தவுடன் லாபம் கொட்டி விடாது.
அதே விஷயம் தான் அந்தப் பெண்ணுக்கும் நடந்தது. முதலில் அந்த அளவுக்கு லாபம் இல்லை. ஆரம்பத்தில் பல பிரச்சனைகள், ஏகப்பட்ட சோதனைகள். சில நாட்கள் எந்த ஒரு ஆர்டரும் இல்லாமல் கூட இருந்துள்ளார். ஒரு சில நாட்களில் ஒரு ஆர்டர் அல்லது இரண்டு ஆர்டர் வருவதே பெரிய விஷயமாக இருந்திருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் பலரும் டிமோட்டிவேட் ஆகி தங்கள் பிசினஸை கைவிட்டு விடுவார்கள். பிசினஸ் தொடங்கும் பலர் செய்யும் முதன்மையான தவறு இதுதான்.
ஆனால் அந்தப் பெண் அவ்வாறு செய்யவில்லை. பொறுமையாகவும் நம்பிக்கையோடு இருந்திருக்கிறார். பின்னர் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ போன்ற ஆன்லைன் தளங்களில் உணவு விற்பனையாளராக ரெஜிஸ்டர் செய்திருக்கிறார். அதன் பிறகிலிருந்து தொடர்ந்து அவருக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கின. உணவின் தரம் சிறப்பாக இருந்ததால் தினசரி ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கியது. வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியதும் அங்கேயே ஒரு சமையல்காரரை வேலைக்கு சேர்த்து மெனுவை அதிகப்படுத்தியுள்ளார்.
இன்று அந்தப் பெண்ணின் கிளவுட் கிச்சன் பிசினஸுக்கு தினசரி அளவில் 15 முதல் 20 வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வருகின்றனர். பிசினஸை தவிர வேறு எதுவும் இந்த அளவுக்கு வருமானம் தந்து இருக்காது என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு யூசர் வருமானத்தை உயர்த்த நினைப்பவர்கள் கடினமாக உழைப்பதை விட சிறந்த தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தார்.
வருமானம் குறைந்து வருவதை நினைத்து வருந்திக்கொண்டு அந்த தொழிலையே செய்து வந்தால் முன்னேறவே முடியாது. பிற வழிகளையும் ஆராய வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications