டீக்கடையில் பணிபுரிந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்கள் மாநில முதல்வராகவும், ஏன் ஒரு நாட்டின் பிரதமராகவும் இருந்துள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் டீக்கடையில் தனது வாழ்க்கையை தொடங்கிய விளையாட்டு வீரர் ஒருவர் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவையால் முன்னேறி தற்போது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் வெள்ளி வென்ற சாங்கேத் சர்கரின் வெற்றிக்கதையை தற்போது பார்ப்போம்.
காமன்வெல்த் பளுதூக்கும்
22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் தற்போது இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் நிலையில் இதில் பளுதூக்கும் போட்டியின் 55 கிலோ எடைப் பிரிவில் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளி வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.
இளமைப்பருவம்
சாங்கேத் சர்கரின் இளமைப் பருவத்தின் பெரும்பகுதி, விடியற்காலையில் எழுந்து தனது தந்தையின் டீக்கடையில் தேநீர் வழங்குவதற்கும், பயிற்சி மற்றும் படிப்பிற்கான நேரத்தை செலவிடுவதற்கும் சரியாக இருந்தது. 21 வயதான பளுதூக்கும் வீரர் சங்கேத் மகாதேவ் சர்கர், தினமும் அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து, மகாராஷ்டிராவின் ஒரு சிறிய நகரமான சாங்லியில் உள்ள தனது தந்தையின் டீக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு டீ வழங்குவதன் மூலம் தனது நாளை தொடங்குவார்.
பயிற்சி - படிப்பு - ஜிம்
டீக்கடையில் வேலை முடிந்த பின்னர் அவர் பளுதூக்கும் பயிற்சிக்கு செல்வார். பகலில் பள்ளிக்கு சென்று படிப்பார். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், மீண்டும் டீக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வார். அதன்பின் உடற்பயிற்சி செய்ய மாலையில் ஜிம்மிற்கு செல்வார்.
ஒரே ஒரு கனவு
சங்கேத் மகாதேவ் சர்கர் தனது முழு குழந்தை பருவத்தை தனது கனவுக்காக தியாகம் செய்துள்ளார். பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று கொடுக்க வேண்டும் என்பதே அவரது ஒரே ஒரு கனவு. காலை 5:30 மணிக்கு எழுந்தது முதல் வாடிக்கையாளர்களுக்கு தேநீர் தயாரிப்பது வரை மாலையில் ஜிம்மிற்கு செல்வது வரை, அவரது கனவை நிறைவேற்றும் அம்சமாக இருந்தது என்று சர்கரின் குழந்தை பருவ பயிற்சியாளர் மயூர் சின்ஹாசனே தெரிவித்தார்.
நனவான கனவு
பளு தூக்குதலில் நாட்டிற்கு விருதுகளை கொண்டு வந்து தனது குடும்பத்திற்கு நல்ல வாழ்க்கையை வழங்க வேண்டும் என்ற அவரது கனவு நிச்சயம் நிறைவேறும் என்று அவர் நம்பினார். இன்று உண்மையிலேயே அவரது கனவு நனவாகிவிட்டது. ஆம் கடந்த சனிக்கிழமை காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
காயம்
போட்டி தினத்தில் பயிற்சியின்போது சங்கேத் மகாதேவ் சர்கருக்கு முழங்கையில் காயம் ஏற்படாமல் இருந்து இருந்தால் அவருக்கு நிச்சயம் தங்கம் கிடைத்து இருக்கும் என்று அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை அவர் ஆரம்பித்து வைத்ததால் அவரது வெள்ளி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பணப்பிரச்சனை
சங்கேத் சர்கரின் தந்தை மகாதேவ் அவர்களுக்கும் பளு தூக்கும் வீரராக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் பணப் பிரச்சனைகள் குறுக்கே வந்ததால் அவரது கனவு நனவாகாமல் போய்விட்டது. ஆனால் மகாதேவ் தனது கனவை தனது மகனின் மூலம் நனவாக்கி கொண்டார்.
ஸ்பான்சர்
சங்கேத் சர்கருக்கும் பொருளாதார பிரச்சனை ஆரம்பத்தில் தலை தூக்கியது. அவருக்கு முதலில் ஸ்பான்சர் கிடைக்கவில்லை. அதனால் அவருடைய தந்தை கடன் வாங்கி தனது மகனின் விளையாட்டுக்கு தேவையான செலவை பூர்த்தி செய்து கொண்டார். சர்கரின் உணவு மற்றும் உடற்பயிற்சி செலவை நாங்கள் முழுவதுமாக ஏற்று கொண்டோம் என்று அவரது பயிற்சியாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மூன்று முறை தேசிய சாம்பியன்
மூன்று முறை தேசிய சாம்பியனான சங்கேத் சர்கர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் NIS பாட்டியாலாவில் நடந்த தேசிய முகாமில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் அவர் இந்திய தலைமை பயிற்சியாளர் விஜய் சர்மாவின் பயிற்சியின் கீழ் உள்ளார்.
சகோதரியும் பளுதூக்கும் வீராங்கனை தான்
சங்கேத் சர்காரின் தங்கையான காஜல், தனது சகோதரனை போல் பளுதூக்கும் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த ஆண்டு கேலோ இந்தியா யூத் கேம்ஸ் பெண்கள் 40 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
தந்தை மகிழ்ச்சி
"நான் பளு தூக்கும் போட்டியில் சாதனை செய்ய விரும்பினேன். ஆனால் நிதிப் பிரச்சனைகளால் எனது கனவு முழுமையடையாமல் இருந்தது. ஆனால் இன்று எனது அனைத்து போராட்டங்களுக்கும் பலன் கிடைத்துள்ளது. அடுத்ததாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தனது மகன் தங்கம் வாங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications