இன்றெல்லாம் பலர், வாரம் முழுக்க உழைத்து விட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் குடும்பத்துடன் வெளியில் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர். இதுவரையில் அதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இனிமேல் ஹோட்டல்களுக்கு செல்லும்போது நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரலாம். வரும் வாரம் முதல் உணவகங்கள் உணவின் விலையை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இது ஆன்லைன் புட் டெலிவரி தளங்களுக்கும் பொருந்தும்.
வழக்கமாக ஹோட்டல் உரிமையாளர்கள் வருடத்திற்கு ஒருமுறை தேவைப்பட்டால் விலை உயர்வை அறிவிப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. காரணம் தொடர்ந்து கேஸ் விலை அதிகரித்து வருகிறது. 75 நாட்களுக்கும் மேலாக போர் பதற்றம் நிலவுவதால் ஹார்மூஸ் ஜலசந்தியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 70 டாலரில் இருந்து 100 டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை அனைத்தும் எகிறத் தொடங்கியுள்ளது.
கேஸ் விலை அதிகரிப்பால் உணவு விலை அதிகரிக்கிறது சரி, ஏன் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவு விலை அதிகரிக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்? பொதுவாக ஒரு பொருளின் விலை ஏற்றம் அதை சார்ந்த தொழில் மற்றும் பிற விஷயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை தான் பாஸ் த்ரூ எஃபெக்ட் என்று கூறுவார்கள்.

அதாவது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் ஒரு இடத்திலிருந்து ஹோட்டல்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் பேக்கிங் கவர் போன்றவற்றை எடுத்து வருவதற்கான செலவும் அதிகரிக்கும். இதனால் வாடகை கட்டணம் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து கட்டணம் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்கும். மேலும் நாட்டின் பணவீக்கம் எரிபொருள் விலையின் காரணமாக 25 புள்ளிகள் வரை உயரும். விலைவாசி உயர்வு ஏற்பட்டால் ஹோட்டல்கள் தங்கள் செலவை ஈடுகட்ட உணவு விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும்.
பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு ஒரு புறம் இருக்க கேஸ் தட்டுப்பாடும் ஹோட்டல்கள் விலை உயர்வை அறிவிக்க காரணமாகியுள்ளன. வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் கமர்சியல் சிலிண்டர் கிடைப்பதே அரிதாகி வருகிறது. இதனால் பல உணவகங்கள் விறகடுப்பில் சமைப்பதற்கு தயாராகி வருகின்றன. மேலும் சில உணவகங்கள் விலைவாசி உயர்வை தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டுள்ளன.
பெரிய பெரிய ஹோட்டல்கள் என்னவோ மெல்ல மெல்ல விலை உயர்வை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால் குறைந்த லாபத்தில் செயல்படும் நடுத்தர ஹோட்டல்கள் மற்றும் ரோட்டோர கடைகள் விலை உயர்வை தாங்க முடியாமல் உடனடியாக அறிவித்துள்ளன.
முன்பு 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி, தற்போது 15 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பரோட்டா, தற்போது 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போல ஒவ்வொரு உணவின் விலையிலும் ஏற்றம் தென்படுகிறது. இப்படியே போனால் ஹோட்டல்களை நம்பி வெளியூர்களில் பணிபுரியும் பேச்சுலர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். என்னதான் ஹோட்டல்கள் விலை ஏற்றத்தை அறிவிப்பதில் நியாயம் இருந்தாலும் இறுதியில் நுகர்வோருக்கு செலவு அதிகரிக்கிறது என்பதே நிதர்சன உண்மை .


Click it and Unblock the Notifications