இந்தியாவில் 5 மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைச் சுமார் 20 நாட்களாக எவ்விதமான மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்துள்ளது.
ஆனால் இதேகாலகட்டத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் OPEC அமைப்பில் இருக்கும் நாடுகளில் தனது உற்பத்தியில் எவ்விதமான தளர்வு செய்ய முடியாது என்று அறிவித்த நிலையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 60 டாலரில் இருந்து 70 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த விலை வித்தியாசத்தின் எதிரொலியாக இந்தியாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 4 ரூபாயும், டீசலுக்கு 2 ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் மக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
மத்திய அரசிடம் கோரிக்கை
இதனால் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டனர், மத்திய அரசு எரிபொருள் மீதான வரியைக் குறைக்கவும், எரிபொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரவும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இரண்டுக்கும் மறுப்புத் தெரிவித்தது.
மதிப்பு கூட்டு வரி
இதேவேளையில் மத்திய அரசு, மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்கக் கோரிக்கை விடுத்தது. இதையேற்று 5க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்தது. தமிழ்நாடு அரசும் வரியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவ்விதமான அறிவிப்பையும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை.
சர்வதேச சந்தை கண்காணிப்பு
இந்நிலையில் சர்வதேசச் சந்தை கண்காணிப்பு என்ற கூறி கச்சா எண்ணெய் நிறுவனங்கள் 5 மாநில தேர்தலுக்கான நாள் அறிவிக்கும் நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தியது. இது மக்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது குறிப்பாக மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்காத மாநிலங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது.
தற்காலிக விலை நிறுத்தம்
இந்தத் தற்காலிக நிறுத்தம் மட்டும் செய்யவில்லை என்றால் தற்போதைய சர்வதேசச் சந்தை விலைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மும்பையில் 103 ரூபாயைத் தாண்டி இருக்கும். இதேவேளையில் சென்னை, பெங்களூர், டெல்லி ஆகிய பெருநகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியிருக்கும்.
கொரோனா கால வர்த்தகம்
கொரோனா காலத்தில் மோசமான வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவு போன்ற பல காரணத்தால் அரசு கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக வர்த்தகமும் அதிகரித்து நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் வேளையில் சுமார் 20 நாட்களாக விலை மாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
அதிகளவிலான நஷ்டம்
இதன் வாயிலாகத் தற்போது பொதுத்துறை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 4 ரூபாயும், டீசலுக்கு 2 ரூபாயும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த விலை உயர்வு நிறுத்தம் மக்களுக்குச் சாதகமாக இருந்தாலும் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சுமையாக மாறியுள்ளது.
5 மாநில தேர்தல் நாள்
5 மாநில தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பிப்ரவரி மாதம் 64.68 டாலர் விலையில் இருந்து கிட்டதட்ட 70 டாலர் வரையில் இந்த இடைப்பட்ட காலத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
முதலீட்டு சந்தை- டாலர் மதிப்பு
இதேகாலகட்டத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பணத்தையும் முதலீட்டையும் இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றிய காரணத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் இக்காலகட்டத்தில் அதிகளவிலான தடுமாற்றத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
2018 கர்நாடக சட்டமன்ற தேர்தல்
இதேபோல் 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போதும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 19 நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தான் தற்போதும் உருவாகியுள்ளது.
தேர்தலுக்குப் பின்
இந்நிலையில் 5 மாநிலத்தின் தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்த பின்பு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
சரி தேர்தலுக்குப் பின் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தமிழ்நாட்டில் எவ்வளவு இருக்கும்..? உங்கள் கணிப்பு என்ன..? பதிலை கமெண்ட் பண்ணுங்க.