எண்ணெய் சுத்திகரிப்பு 3வது நாளாக இன்று மாலை வரையில் எவ்விதமான விலை உயர்வும் அறிவிக்காத நிலையில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் பிப்ரவரி மாதம் முழுவதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாளாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.
இதன் மூலம் டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.93 ரூபாயும், டீசல் விலை 81.32 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சுமார் 13 நாட்கள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3.98 ரூபாயும், டீசல் விலை 4.19 ரூபாயும் உயர்ந்துள்ளது. இது டெல்லி விலை நிலவரம், ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும்.
இதேவேளையில் சர்வதேச வர்த்தகச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் 66 டாலரை எட்டியுள்ள காரணத்தால் இந்தியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சந்தை விலையைக் கண்காணிக்க முடிவு செய்து தற்காலிகமாக விலை உயர்வை நிறுத்தி வைத்துள்ளது.