5 மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட தடுமாற்றம் எனப் பல காரணங்கள் மத்தியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த 6 வாரங்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் மக்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்வதில் பொதுத்துறை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த 6 வார காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பெரிய அளவில் உயர்ந்துள்ளது, ரூபாய் மதிப்பும் சரிந்தது மறக்கக் கூடாது. இந்த இக்காட்டான சூழ்நிலையில் எரிபொருள் விலையை மாற்றாமல் வைத்திருந்தது கச்சா எண்ணெய் நிறுவனங்கள்.
இந்தச் சூழ்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி, யார் யார் எந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது என்பது முடிவான சூழ்நிலையில் கடந்த 2 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நேற்றைய விலை உயர்வை விடவும் இன்று சற்று கூடுதலாகவே விலை உயர்ந்துள்ளது. இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரு லிட்டர் பெட்ரோல் 19 பைசாவும், டீசல் 21 பைசாவும் உயர்ந்துள்ளது. இது நேற்று 15 மற்றும் 18 பைசாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை உயர்வின் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 92.70 ரூபாய்க்கும், டீசல் விலை 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு அறிவிப்புகளை அறிவித்துள்ளது.
குறிப்பாகப் பெரு நகரங்களில் வார இறுதி நாட்கள் லாக்டவுன், இரவு நேர லாக்டவுன் ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் தேவையைப் பெரிய அளவில் குறைத்துள்ளது என்றால் மிகையில்லை.
ஒருபக்கம் மக்களை விடாமல் துரத்தும் கொரோனா தொற்று, மறுபக்கம் லாக்டவுன் காரணமாக மெல்ல மெல்ல இழந்து வரும் வர்த்தகங்கள் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்பு இழப்பு மூலம் மக்கள் தங்களது வாழ்க்கையை வாழவே இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை அதிகளவில் பாதிக்கும்.
எரிபொருள் விலையில் ஏற்பட்டு உள்ள இந்த உயர்வு காய்கறி, பழங்கள், உணவு பொருட்கள் முதல் கார் பைக் வரையில் போக்குவரத்தை நம்பி இயங்கும் அனைத்து உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் விலை பாதிக்கும். இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் கடினமாகும்.