சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதில் இருந்து நிலைபெற்று உள்ள போதிலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வலிமை அடைந்து வரும் நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தேர்தல் காரணமாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கொரோனா தொற்றால் மக்கள் படும் கஷ்டங்களுக்கு மத்தியில் கூடுதல் சுமையாகப் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மே 4ஆம் தேதி முதல், அதாவது 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில், இன்றும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.24 பைசா உயர்ந்து 93.62 ரூபாய்க்கும், டீசல் விலை 29 பைசா உயர்ந்து 87.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையில் இன்றைய விலை அதிகரிப்பு மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91.80 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 91.92 ரூபாயாகவும், மும்பையில் 98.12 ரூபாயாகவும், பெங்களூரில் 94.85 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 95.41 ரூபாயாகவும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் மோசம்
இன்றைய விலை உயர்வின் மூலம் நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் அதிகப்படியாகச் சாதாரணப் பெட்ரோல் விலை 98.12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ப்ரீமியம் பெட்ரோல் விலை 100ஐ கடந்துள்ளது. தற்போது இருக்கும், எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்தால் அடுத்த ஒரு வாரத்திற்குள் மும்பையில் சாதாரணப் பெட்ரோல் கூட 100ஐ கடந்துவிடும்.
டீசல் விலை
இதைத் தொடர்ந்து நாட்டின் முக்கியமான நகரங்களில் டீசல் விலை 29 முதல் 32 பைசா வரையில் உயர்ந்துள்ளதன் வாயிலாக ஒரு லிட்டர் டீசல் விலை 82.36 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 85.20 ரூபாயாகவும், மும்பையில் 89.48 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 89.79 ரூபாயாகவும், பெங்களூரில் 87.31 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.