இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா போன்ற வட இந்திய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா எனத் தென்னிந்திய மாநிலங்களும் முழுலாக்டவுன் அறிவிக்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கிட்டதட்ட 70 சதவீத மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முழுலாக்டவுன் அறிவிக்கப்படுவது மூலம் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை முடியும். இதனால் உற்பத்தி துறை முதல் நாட்டின் அனைத்து வர்த்தகத் துறையும் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆட்டோமொபைல் துறையின் நிலை தான் மிகவும் மேசமாக இருக்கிறதாம்..?!
லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இந்தியாவில் தற்போது லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் உரிமை கடந்த ஆண்டுக் கொரோனா தொற்றின் போது மத்திய அரசு வைத்திருந்த நிலையில் தற்போது மாநில அரசிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநில அரசு முறையாகத் திட்டமிட்டு எந்தப் பகுதியில் அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பதை முறையாகத் திட்டமிட்டுச் செய்ய முடியும்.
கொரோனா 2வது அலை
ஆனாலும் கொரோனா 2வது அலை தற்போது கட்டுப்பாட்டை இழந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிரம் அடைந்து வரும் சூழ்நிலையில், முழு லாக்டவுன் அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாகியுள்ளது. இதன் வாயிலாகவே தற்போது நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் முழுலாக்டவுன் அறிவித்து வருகிறது.
இந்திய ஆட்டோமொபைல் துறை
முழு லாக்டவுன் கட்டுப்பாடு மூலம் மே மாதம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் வர்த்தகம் சுமார் 70 முதல் 80 சதவீதம் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
80 சதவீத விற்பனை பாதிப்பு
இதுமட்டும் அல்லாமல் நாடு முழுவதும் உள்ள 26,500 ஆட்டோமொபைல் ரீடைல் விற்பனை கடைகளில் சுமார் 20000 ரீடைல் விற்பனையங்கள் முழு லாக்டவுன் காரணமாக மூடப்பட உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மீதமுள்ள கடைகளும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் மூடப்பட வாய்ப்புகள் உள்ளது.
ஆட்டோமொபைல் தொழிற்சாலை
இதன் மூலம் கார் மற்றும் பைக் வாங்க வருவோரின் எண்ணிக்கை குறைவது மட்டும் அல்லாமல் வர்த்தகம் 80 சதவீதம் வரையில் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொரோனா தொற்றுக் காரணமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள்
இதேபோல் 2020 கொரோனா தொற்று முதல் அலையில் கார், பைக் விற்பனை குறைந்தாலும், விவசாய துறையில் பயன்படுத்தும் டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் விற்பனை குறையவில்லை. ஆனால் 2வது அலையில் இந்தியக் கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவியுள்ள காரணத்தால் தற்போது டிராக்டர் விற்பனையும் பாதித்துள்ளது.