டெல்லி: கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பித் தர உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருமாறு கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. அதன் படி ரத்தான டிக்கெட்டுக்கு பதிலாக 2021 மார்ச் வரை, கிரெடிட் ஹெல்களை பயன்படுத்தி, அதில் பதிவு செய்யப்பட்ட விமான பயணிகளின் கட்டணத்தை இருப்பு வைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதோடு அடுத்த ஆண்டு மார்ச் வரையில் சம்பந்தப்பட்ட பயணிகள் பயணிக்க விமான நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அந்த காலத்திற்குள் பயணி விமானத்தில் பயணிக்கா விட்டால், கட்டணம் கட்டாயமாக பயணிகளுக்கு திரும்ப தர வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு மார்ச் 31, 2021 தேதிக்கு பிறகு பயணிகள் பயன்படுத்தாமல் வழங்கப்படும் தொகைக்கு 0.75% இன்செண்டிவ் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பானது உள்நாட்டு விமான டிக்கெட்டுகளாக இருந்தாலும், வெளி நாடுகளுக்கு செல்ல பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளாக இருந்தாலும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
லாக்டவுனுக்கு முன்பாக, லாக்டவுனின் போது பயணிப்பதற்காக பதிவு செய்யப்பட்ட, முன்பதிவுகளுக்கும் ஷெல் திட்டத்தின் மூலம் பணத்தினை பெற தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. எப்படி எனினும் லாக்டவுனின் போது, லாக்டவுனில் பயணிக்க பதிவு செய்திருந்தால், அவர்களுக்கு உடனடியாக ரீபண்டினை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஏனெனில் விமான நிறுவனங்கள் அத்தகைய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான மூன்று நபர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு முன்னதாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பொது முடக்கத்துக்கு முன்பு முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணசீட்டுக்கான தொகை சம்பந்தப்பட்ட பயணிகளின் பெயரில் வரவுகணக்கில் வைக்கப்படும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது. அந்த தொகையை பயணிகள் 2021 மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் இதில் அடங்கும் என தெரிவித்து இருந்தது. லாக்டவுன் காலத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டண தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து தேவை பிரிவு முடிவெடுக்கும் எனவும், நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.