முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் பியூச்சர் குரூப் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்தது, ஆனால் அமேசான் நிறுவனத்தின் வழக்குக் காரணமாகச் சுமார் 20 மாதங்களாக இந்த ஒப்பந்தத்தில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல், தற்போது ரீடைல் விற்பனை கடைகளையும் இழந்து, வர்த்தகத்தையும் இழந்து திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
பியூச்சர் குரூப் எதிர்காலத்தை அடுத்த சில நாட்களில் தீர்மானிக்கப்படும் நிலையில் அழுது புலம்பும் நிலைக்குக் கிஷோர் பியானி தள்ளப்பட்டு உள்ளார். இதேவேளையில் அமேசானும், ரிலையன்ஸ்-ம் நைஸாக நழுவியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே 946 பியூச்சர் ரீடைல் கடைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில் ஜனவரி 31, 2022 முடிவில் பியூச்சர் குரூப் கீழ் இருக்கும் 19 நிறுவனத்தின் மொத்த கடன் நிலுவை 28,921 கோடி ரூபாய் (வட்டியுடன் சேர்த்து), தற்போது கைப்பற்றப்பட்ட வர்த்தகத்திற்கு இணையாகச் சுமார் 12,612 கோடி ரூபாய் அளவிலான கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மாற்ற திட்டத்தை முன்வைத்துள்ளது பியூச்சர் குரூப்.
பியூச்சர் குரூப்
இந்தத் திட்டத்திற்குப் பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், பியூச்சர் குரூப்-ஐ திவாலாக அறிவிக்கப்பட்டு, சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இணைப்பு
பியூச்சர் குரூப்-ல் இருக்கும் 19 நிறுவனத்தில் இருக்கும் வர்த்தகங்களில் ஒன்றுக்கு ஒன்று இணைக்கப்பட்டது. இதனால் தனியாக விற்பனை செய்யவோ பிரிக்கவோ முடியாமல் உள்ளது. இதனால் மொத்தமாக விற்பனை செய்வது தான் சரியானதாக இருக்கும்.
கடன்
இந்த நிலையில் பியூச்சர் குரூப்-ன் 28,921 கோடி ரூபாய் கடன் நிலுவையில் பெரும் பகுதி கடன் பியூச்சர் ரீடைல், மற்றும் பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் பெயரில் உள்ளது. இந்நிலையில் பியூச்சர் குரூப்-ல் இருக்கும் சில நூறு கடைகள் மற்றும் கணிசமான வர்த்தகத்தைத் தற்போது பணமாக்க, கடன் கொடுத்தவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
ரிலையன்ஸ், அமேசான்
பியூச்சர் குரூப் உடனான ஒப்பந்தத்தில் பெரிய முதலீடுகளைச் செய்யாமல் 946 கடைகளைக் கைப்பற்றியது ரிலையன்ஸ், பியூச்சர் குரூப் தனது சிறிய தொகை முதலீட்டை வைத்து பெரும் வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது மட்டும் அல்லாமல் தனது முதலீட்டு ஆதிக்கத்தை நிரூபணம் செய்துள்ளது. ஆனால் மொத்த பாதிப்பும் பியூச்சர் குரூப் கிஷோர் பியானிக்கு தான்.
திவால்
ஏற்கனவே பியூச்சர் குரூப் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கவும், நிறுவன சொத்துக்களைக் கைப்பற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முடிவு மற்றும் இறுதி அறிவிப்பு வெளியிட 3 மாதம் ஆகும்.