இந்தியாவில் ஆடை மற்றும் டெக்ஸ்டைல் துறை ஏற்கனவே பருத்தி, கெமிக்கல் விலை உயர்வால் வர்த்தகம் முதல் லாபம் வரையில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் ஒரு திட்டம் தற்போது இந்திய கார்மெண்ட் ஏற்றுமதியாளர்களுக்குச் சுமார் 1200 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் பல நடுத்தர மற்றும் சிறு ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது, அப்படி என்ன திட்டம்..? ஏன் இந்த நிலை..?
RoSCTL திட்டம்
மத்திய அரசு ரிபேட் ஆப் ஸ்டேட் அண்ட் சென்டரல் டாக்ஸ் அண்ட் லெவிஸ் (RoSCTL) திட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்கள் தான் தற்போது கார்மெண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
ஏற்றுமதியாளர்கள்
இந்த RoSCTL திட்டம் என்பது ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்தி செலவுகளில் செலுத்திய வரி மற்றும் கட்டணங்களுக்கு ரிபேட் (தள்ளுபடி - Rebate) கொடுக்கும் திட்டம். மத்திய அரசு இந்த ரபேட் பணத்தை வெறும் பணமாகக் கொடுக்காமல் அதை ஸ்கிரிப்ட் (கிட்டத்தட்ட பத்திரம்) ஆக மாற்றி யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வாய்ப்பை உருவாக்கியது.
ரிபேட் ஸ்கிரிப்ட்
பொதுவாக ஏற்றுமதியாளர்கள் இந்த ஸ்கிரிப்ட்-ஐ இறக்குமதியாளர்களுக்குத் தான் விற்பனை செய்வார்கள், இறக்குமதியாளர்கள் இந்த ஸ்கிப்ட்-ஐ இறக்குமதி வரியை பணமாகச் செலுத்துவதற்குப் பதிலாகப் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்.
20 சதவீத தள்ளுபடி
ஆனால் தற்போது பிரச்சனை என்னவென்றால் இந்த ரிபேட் தொகைக்கான ஸ்கிரிப்ட் டிசம்பர் மாதம் 3 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கார்மெண்ட் ஏற்றுமதியாளர்கள் தற்போது லாபத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டம்
இந்தத் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரிபேட் ஸ்கிரிப்ட் மூலம் இறக்குமதியாளர்களுக்கு அதிகப்படியான நன்மை கிடைத்தாலும், ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என AEPC மற்றும் GEMA அமைப்பின் தலைவர் விஜய் ஜின்டால் தெரிவித்துள்ளார்.
1,200 கோடி ரூபாய் பாதிப்பு
இந்தியாவின் வருடாந்திர டெக்ஸ்டைல் ஏற்றுமதி மதிப்பான 44 பில்லியன் டாலரில் கார்மெண்ட் ஏற்றுமதி அளவு மட்டும் 16 பில்லியன் டாலர். இந்நிலையில் RoSCTL திட்டத்தின் கீழ் ஆடை ஏற்றுமதியில் திருப்பிச் செலுத்தப்படும் தொகை சுமார் 5 சதவீதம். தோராயமாக ரூ. 6,000 கோடி ஆகும், இதில் 20% தள்ளுபடி என்பது ஏற்றுமதியாளர்களுக்கு நேரடியாகச் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.