சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஹரேலி திஹாரை பண்டிகையை முன்னிட்டு, இம்மாநிலத்தில் பசுவின் கோமியம் கொள்முதல் செய்யும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சரின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின் போது பூபேஷ் பாகேல் இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
பூபேஷ் பாகேல் 5 லிட்டர் மாட்டுக் கோமியத்தைச் சுமார் 20 ரூபாய்க்கு சந்த்குரியின் நிதி சுயஉதவி குழுவிற்கு விற்பனை செய்தார், அதாவது ஒரு லிட்டர் 4 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
பூபேஷ் பாகேல் வேண்டுகோளின் பேரில், நிதி சுயஉதவி குழு (Nidhi Self-Help Group) விற்பனை செய்யப்பட்ட தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதியில் டெபாசிட் செய்தது.
மாட்டுக் கோமியம் கொள்முதல்
இந்தியாவிலேயே மாட்டுக் கோமியம் கொள்முதல் செய்யும் முதல் மாநிலமாகச் சத்தீஸ்கர் உருவெடுத்துள்ளது. கால்நடை வளர்ப்பவர்களிடமிருந்து மாட்டுச் சாணத்தை வாங்குவதற்காக 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோதன் நியாய் யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டது.
கோதன் நியாய் யோஜனா திட்டம்
இதே திட்டத்தின் கீழ் தற்போது மாட்டு மூத்திரத்தை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு இம்மாநில அரசு வாங்குகிறது. 2020ல் கோதன் நியாய் யோஜனா திட்டம் துவங்கும் போது விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து மாட்டுச் சாணத்தைக் கொள்முதல் செய்யும் முதல் மாநிலமாக இருந்த நிலையில் தற்போது கோமியத்தையும் வாங்க முடிவு செய்துள்ளது.
ஹரேலி திஹாரை பண்டிகை
ஹரேலி திஹாரை பண்டிகையை முன்னிட்டு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் விவசாய உபகரணங்கள் மற்றும் கருவிகளை வணங்கினார், கொண்டாட்டங்களின் போது ஒரு பசுவிற்குத் தீவனம் கொடுத்தார். மேலும், இயற்கை உரங்கள் தயாரிப்பதற்காக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.17 கோடியை வழங்கினார்.
மாட்டுச் சாணம்
கோதன் நியாய் யோஜனா திட்டத்தின் பல நேர்மறையான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பல மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்கத் தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மாட்டுக் கொட்டகையில் மாட்டுச் சாணத்தைக் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய்க்கு விற்கின்றனர்.
ரூ.300 கோடி
கடந்த இரண்டு ஆண்டுகளில், கோதன் நியாய் யோஜனா மூலம் மாட்டுச் சாணம் விற்பனையாளர்கள், கவுதன் கமிட்டிகள் மற்றும் மகளிர் குழுக்களின் கணக்குகளுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகை மாற்றப்பட்டுள்ளது என்று பூபேஷ் பாகேல் கூறினார்.
ஊரகப் பொருளாதாரம் மேம்பாடு
உள்துறை அமைச்சர் தாம்ரத்வாஜ் சாஹு, வனத்துறை அமைச்சர் முகமது அக்பர், தொழில்துறை அமைச்சர் கவாசி லக்மா ஆகியோர் முதல்வர் வீட்டில் நடந்த ஹரேலி திஹாரை பண்டிகையின் விழாவில் கலந்து கொண்டனர். இந்த மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் விற்பனை மூலம் ஊரகப் பொருளாதாரம் மேம்படுவதாகச் சத்தீஸ்கர் மாநில அரசு நம்புகிறது.