இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான கௌதம் அதானியின் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப அவரது சொத்து மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் கடந்த 6 மாதத்தில் அவ்வப்போது டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தும் வெளியேறி வந்த கௌதம் அதானி கடந்த ஒரு மாதமாக 8 மற்றும் 9வது இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் அதானி பவர், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்த காரணத்தால், இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
போர்ப்ஸ்
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஏர்போர்ட் முதல் துறைமுகம் வரை, மின்சார உற்பத்தி முதல் சமையல் எண்ணெய் வரையில் பல துறையில் வர்த்தகம் செய்தும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இன்று வாரன் பபெட்-ஐ பின்னுக்குத்தள்ளி 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கௌதம் அதானி
கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்புத் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் 123.2 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் 5வது இடத்தில் 121.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்த வாரன் பபெட் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
முகேஷ் அம்பானி
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 104.2 பில்லியன் டாலர் உடன் 8வது இடத்தில் உள்ளார். எப்போது டாப் 10 பட்டியலில் இந்தியர்கள் பரிவில் முகேஷ் அம்பானி மட்டுமே இருந்த நிலையில் தற்போது கௌதம் அதானி 5வது இடத்திற்கு நுழைந்துள்ளார்.
இந்திய பொருளாதாரம்
சமீபத்தில் நடந்த பொருளாதாரக் கூட்டத்தில் கௌதம் அதானி 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 28-30 டிரில்லியன் டாலராக உயரும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்திய பங்குச் சந்தை மூலதனத்தில் 40 டிரில்லியன் டாலர்களையும் சேர்க்கும், மேலும் வறுமையை முழுமையாக ஒழித்துவிடும் என்று அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
முதலீட்டுத் திட்டம்
அடுத்த 10 ஆண்டுகளில் கிளீன் எனர்ஜி உற்பத்தி, உதிரிப்பாகங்கள் உற்பத்தி, டிரான்ஸ்மிஷன் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் சுமாார் 20 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது அதானி குழுமம்.