கடந்த வாரம் உலக பணக்காரர் பட்டியல் வெளியான போது அதில் மூன்றாவது இடத்தில் இந்தியாவின் தொழில் அதிபர் கௌதம் அதானி இடம் பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
முதலாவது இடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் மற்றும் இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது இடத்திலிருக்கும் ஜெஃப் பெசோஸ் அவர்களின் சொத்து மதிப்பை அதானி நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கெளதம் அதானி
கடந்த வாரம், இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி, லூயிஸ் உய்ட்டனின் இணை நிறுவனரும் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆனார். இந்த நிலையில் அவர் விரைவில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிடமிருந்து இரண்டாவது இடத்தை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் 2வது இடம்
வாரன் பஃபெட் மற்றும் பில் கேட்ஸ் போன்ற கோடீஸ்வரர்களின் நிகர மதிப்பை முந்திக்கொண்டு, சமீபத்தில் உலகின் மூன்றாவது பணக்காரராக ஆன முதல் ஆசியரான அதானியின் சொத்துமதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் கணிப்பின்படி அவரது தற்போதைய நிகர மதிப்பு $143 பில்லியன் என்றும், அவர் இரண்டாவது இடத்தில் உள்ள ஜெஃப் பெசோஸ் அவர்களின் சொத்துமதிப்பான $149 பில்லியனை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
1000% உயர்வு
ப்ளூம்பெர்க்கின் தகவலின்படி கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்கு பின் அதானியின் சில நிறுவனங்களின் பங்குகள் 1,000% உயர்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் பங்கு விலை ஜனவரி 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது 1500% உயர்ந்துள்ளது என்றும், அதேசமயம் அதானி டிரான்ஸ்மிஷனின் பங்கு விலையும் 1000%க்கு மேல் உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
லாபம்
அதேபோல் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் கேஸ் வர்த்தகம் 750 மடங்குக்கு மேல் லாபம் ஈட்டுகிறது. மேலும் அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை 400 மடங்குக்கு அதிகமாக மதிப்பிட்டுள்ளது.
முதலிடம் எப்போது?
எனவே விரைவில் அதானி உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற நிலையை அடைவார் என்றும், அதேபோல் ஒருசில ஆண்டுகளில் எலான் மஸ்க்கின் முதலிடத்தை பெறவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications