அகமதாபாத்: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக விளங்கும் அதானி குழுமத்தின் உணவுப் பொருட்கள் பிரிவான அதானி வில்மார், இந்த நிதியாண்டில் சுமார் ரூ.600 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ அங்கசு மாலிக் (Angshu Malick) தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட அதானி வில்மார்-ன் இந்த புதிய முதலீட்டு அறிவிப்பு முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
அதானி வில்மார் இந்த 600 கோடி ரூபாய் நிதியைச் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நுகர்வோர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

இதற்கு முன்னதாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் தொழிற்சாலைகளின் திறனை அதிகரிக்க ரூ.3,400 கோடி முதலீடு செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்த முதலீட்டு திட்டம் இல்லாமல் 600 கோடி ரூபாய் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய அதானி வில்மார் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரின் வில்மார் நிறுவனம் இணைந்து உருவாக்கியது தான் இந்த அதானி வில்மார் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் சுமார் 88 சதவீத பங்குகளை தற்போது வைத்திருக்கும் வேளையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நிறுவனத்தின் குறைந்தபட்ச பொதுப் பங்கு உரிமை விதிமுறைக்கு இணங்க75 சதவிகிதமாகக் குறைக்க வேண்டியுள்ளது.
அதானி வில்மார் சமையல் எண்ணெய், உணவு மற்றும் எஃப்எம்சிஜி துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் 'ஃபார்ச்சுன்' என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்கிறது.
இந்நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.313.20 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.78.92 கோடி நட்டத்தை சந்தித்ததை நிலையில் இது பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதானி வில்மார் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.14,229.87 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.12,994.18 கோடியாக இருந்தது.


Click it and Unblock the Notifications